Increase Breast Milk: தாய்ப்பால் கொடுக்க முடியாமல் சிரமமா..? சுரப்பை அதிகரிக்க இந்த உணவுகள் உதவும்..!
Increase Breast Milk Production: தாய்ப்பால் குழந்தையின் வளர்ச்சிக்கு மிக அவசியம். பசலைக்கீரை, ஓட்ஸ், துளசி, பூண்டு, வெந்தயம், சோம்பு போன்ற உணவுகள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும். போதுமான தாய்ப்பால் சுரக்க, அடிக்கடி குழந்தைக்கு பாலூட்ட வேண்டும், சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் மற்றும் மார்பக மசாஜ் செய்ய வேண்டும்.

தாய்ப்பால் (breast milk) என்பது குழந்தைக்கு மிகவும் முக்கியமானது. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலானது அதிக நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி நோய்களிலிருந்து பாதுகாக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தரும். தாய்ப்பாலில் காணப்படும் ஆண்டிபாடிகள் குழந்தையின் மன மற்றும் உடல் வளர்ச்சியையும் துரிதப்படுத்தும். தாய்ப்பாலானது குழந்தைகளுக்கு மட்டுமின்றி, தாய்க்கும் நன்மை தரும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு எடையை கட்டுக்குள் வைக்கவும், கருப்பை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பவும் உதவி செய்யும். இத்தகைய சூழ்நிலையில், பிரசவத்திற்கு (Pregnancy) பிறகு தாயின் தாய்ப்பால் போதுமான அளவில் உற்பத்தி செய்வது மிக முக்கியமானது. அதன்படி, கர்ப்பத்திற்குப் பிறகு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
பசலை கீரை:
பசலை கீரை சாப்பிடுவது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்ய சிறந்த உணவாகும். பொதுவாகவே, இரத்தச்சோகை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக பசலைக்கீரையை சாப்பிடலாம். பசலைக் கீரையில் ஃபோலிக் அமிலம் மற்றும் கால்சியம் உள்ளது. இது தாய் மற்றும் குழந்தை என இருவரையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அதன்படி, பசலைக் கீரையை தொடர்ந்து உட்கொள்வது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும்.
ஓட்ஸ்:
நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்க செய்யும். தாய்ப்பால் கொடுக்கும்போது கஞ்சி போன்ற உணவுகளை சாப்பிடுவதில் சலிப்பு ஏற்பட்டால், ஓட்ஸை தாராளமாக சாப்பிடலாம். இது தாய்ப்பாலை அதிகரிக்க செய்வதுடன், தாய்க்கு தேவையான ஆற்றலையும் தருகிறது. அதன்படி ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸில் பால் கலந்து சாப்பிடுதல் போன்றவற்றை எளிதாக செய்யலாம்.




துளசி:
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த துளசி இலைகள், தாய்ப்பாலை அதிகரிக்கும். இந்த துளசியானது தாய் மற்றும் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. துளசி இலைகளை வெந்நீரில் சேர்த்து குடிப்பதால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
பூண்டு:
தாய்ப்பாலை அதிகரிக்க சிறந்த உணவு பூண்டு. பூண்டு பால் உற்பத்தி செயல்முறைக்கு உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது. நீங்கள் சில பூண்டு பற்களை வறுத்து சூப் அல்லது காய்கறிகளில் சேர்த்து சாப்பிடலாம். அதிகப்படியான அளவில் பூண்டை எடுத்துக்கொள்வது பாலில் சுவை மாற்றும். எனவே, சீரான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.
வெந்தயம், சோம்பு:
வெந்தயம் மற்றும் சோம்பை தனித்தனியே தண்ணீரில் ஊறவைத்தும், கொதிக்க வைத்தும் கொடுக்கலாம். தாய்ப்பாலை அதிகரிப்பதிலும் வெந்தயம் நன்மை பயக்கும். அப்படி இல்லையென்றால், சிறிதளவும் வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். பால் சுரப்பை அதிகரிக்க, பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்கள் சோம்பு எடுத்துக்கொள்ள வேண்டும். சோம்பு செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவும். இது குழந்தைக்கு தேவையான செரிமானத்தையும் கொடுக்கும்.
இது தவிர, பால் மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் தயிர், சீஸ் போன்றவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பாதாம், வால்நட்ஸ், முந்திரி போன்ற உலர் பழங்களையும், பருவகால பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். எனவே, தேங்காய் தண்ணீர், எலுமிச்சைப் பழம் போன்ற ஆரோக்கியமான பானங்களை உட்கொள்ளலாம்.
தாய்ப்பால் சுரக்க என்ன செய்யலாம்..?
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள வழி அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது . ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் ஒரு முறை குழந்தைக்கு உணவளிக்கவும், இரவில் கூட தாய்ப்பால் கொடுப்பது கட்டாயம். போதுமான பால் விநியோகத்தை பராமரிக்க, தாய்க்கு தினமும் சுமார் 500 கூடுதல் கலோரிகள் தேவை, ஆனால் இந்த கலோரிகள் சத்தானதாக இருக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னும் பின்னும் மார்பக ஓட்டத்தை மேம்படுத்த மென்மையான மசாஜ் செய்வதும் முக்கியம்.
நீங்கள் குழந்தையுடன் அதிக நேரம் செலவிடுவதால், உடலில் ஆக்ஸிடாஸின் ஹார்மோன் அதிகமாக வெளியிடப்படும், இது பால் உற்பத்தியை அதிகரிக்கும்.