திறக்காத கூட்டணி கதவு.. செய்வதறியாது கையறு நிலையில் பன்னீர்செல்வம்.. எதிரே இருக்கும் ஒரே சான்ஸ்!
O Panneerselvam Alliance Stance: வருகிற சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தை பிறந்தால் வழி பிறக்கும் அப்போது தெரிவிக்கிறேன் என கூறி வந்த ஓபிஎஸ் தை மாதம் முடிவடைந்தும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளார். அவரது தேர்தல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் முக்கிய புள்ளியாக வலம் வந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி உடனான கருத்து வேறுபாடு காரணமாகவும், அதிமுகவின் கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டதாகவும் கூறி அந்த கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதுடன், நீக்கம் செய்யப்பட்டார். இதனால், ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அவருடன் சேர்ந்து கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இதன் பிறகு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது அணியில் 4 எம்எல்ஏக்கள் இருந்தனர். தற்போது நெருங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் தெளிவான முடிவு எடுக்காமல் இருந்து வருகிறார். இதனால், எதிர்கால அரசியல் திட்டம் என்ன என்பது தெரியாமல் அவரது ஆதரவாளர்கள் பலர் குழம்பிப் போய் உள்ளனர். இதனால், ஓபிஎஸ் அணியிலிருந்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தனர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறிய ஓபிஎஸ்
இது, ஓ பன்னீர் செல்வத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. அவரது தேர்தல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போதெல்லாம், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தெரிவித்து வந்தார். ஆனால், நேற்றுடன் தை மாதம் முடிவடைந்து விட்டது. ஆனால், தற்போது வரை ஓ. பன்னீர்செல்வம் தனது கூட்டணி நிலைப்பாட்டையும், அரசியல் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தாமல் உள்ளார். இதனிடையே, அதிமுக, பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்தது போலவும், எதிரும், புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் இணைந்தது போல, நாங்களும் அதிமுகவில் இணைய தயாராக உள்ளோம்.
மேலும் படிக்க: “மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000″ஆக உயர்த்தி வழங்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி!!




தை மாதம் முடிந்தும் வழி பிறக்கவில்லையா
எங்களை இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்கிறாரா என்று அதிரடி காண்பித்து பேசி இருந்தார். ஆனால், அவரது எண்ணத்துக்கு தடை போடும் வகையில், ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் இணைக்க முடியாது என்று எடப்பாடி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதனால், ஓ பன்னீர்செல்வம் கையறு நிலையில் இருந்து வருகிறார். இதனால், அவருக்கு தை மாதம் முடிவடைந்தும் வழி பிறக்கவில்லை என தெரிகிறது.
ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் ஒரே சான்ஸ்
இதனிடையே, அவரது ஆதரவாளர்கள் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் எனவும், தங்களுக்கு சாதகமாக உள்ள தொகுதிகளை அந்த கட்சியின் தலைமையிடம் கேட்டு பெற்று அதில் போட்டியிடலாம் எனவும் வலியுறுத்தி வருகின்றனாராம். ஏற்கனவே, தமிழக வெற்றி கழகத்துடன், சசிகலா அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, அதே பாணியில் ஓ. பன்னீர்செல்வம் அணியும் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிகிறது. இது மட்டுமே ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் ஒரே வழியாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் புறப்பட்டார் விஜய்…தேர்தல் பரப்புரையை தொடங்க இருப்பதாக திட்டம்?