V. V. Rajan Chellappa Tamil Nadu Election: தேர்தலில் கவனம் பெறும் திருப்பரங்குன்றம் தொகுதி.. மீண்டும் வசமாக்குவாரா வி.வி.ராஜன் செல்லப்பா!
Tamil Nadu Elections 2026 : அதிமுகவில் திருப்பரங்குன்றம் தொகுதியின் தற்போதைய எம். எல்.ஏ.வாக இருந்து வரும் வி. வி. ராஜன் செல்லப்பா வருகிற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று எம். எல். ஏ பதவியை தக்க வைத்துக்கொள்வாரா .
அதிமுகவில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் எம். எல். ஏ. வாக இருந்து வருபவர் வி.வி.ராஜன் செல்லப்பா. இவர், கடந்த 1949- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16- ஆம் தேதி பிறந்தார். மாணவ பருவத்தில் இருந்தே அரசியல் ஆர்வத்துடன் இந்திய எதிர்ப்பு போராட்டங்களில் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும், கல்லூரி காலங்களில் திராவிட மாணவ முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக செயல்பட்டதுடன் மாணவர் அணி செயலாளராகவும் இருந்தார். அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம். ஜி. ஆரின் ரசிகராக ராஜன் செல்லப்பா இருந்து வந்தார். அப்போது, எம். ஜி. ஆர். தொடங்கிய அதிமுகவில் மதுரை மாவட்ட மாணவர் அணி செயலாளராக ராஜன் செல்லப்பா நியமனம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 1980- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட ராஜன் செல்லப்பா திமுக வேட்பாளர் மாயத்தேவரிடம் தோல்வி அடைந்தார்.
அதிமுகவில் இருந்து விலகி மீண்டும் இணைந்தார்
பின்னர் எஸ். டி. எஸ். தொடங்கிய நமது கழகத்தில் ராஜன் செல்லப்பா இணைந்தார். அந்த கட்சியின் சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் எஸ். டி. எஸ். கட்சி அதிமுகவில் இணைந்த போது ராஜன் செல்லப்பாவும் அதிமுகவில் இணைந்தார். பின்னர், 1989- ஆம் ஆண்டு ஜெயலலிதா அணியில் செயல்பட்டு வந்த ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அந்த காலகட்டத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட செயலாளர், மாநில இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்திருந்தார்.
மேலும் படிக்க: P.Moorthy Tamil Nadu Election: மதுரை கிழக்கு தொகுதியில் மீண்டும் வெற்றியை உரித்தாக்குவாரா பி.மூர்த்தி!




2016- இல் எம்எல்ஏவாக தேர்வான ராஜன் செல்லப்பா
மேலும், 1992 முதல் 1998- ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் ராஜன் செல்லப்பா இருந்து வந்தார். பின்னர், இரட்டை இலை சின்னத்தை முடக்குவது தொடர்பாக கையெழுத்து போட்டதாக ராஜன் செல்லப்பா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 2001- ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தார் அதைத் தொடர்ந்து மதுரை மேயராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2013- இல் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்தார். 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானார்.
திருப்பரங்குன்றம் தொகுதியை தக்க வைத்துக்கொள்வாரா
இதே போல, 2021 சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மாறி களம் கண்ட வி. வி. ராஜன் செல்லப்பா தனது வெற்றியை நிலை நிறுத்தினார். அந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.கே பொன்னுத்தாயை வீழ்த்தி 1,03,683 வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வி. வி. ராஜன் செல்லப்பா மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வழக்கம்போல இந்த தேர்தலிலும் தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: R.P.Udayakumar Tamil Nadu Election: திருமங்கலம் தொகுதியில் வெற்றிக் கனியை பறிப்பாரா ஆர்.பி.உதயகுமார்!