தேர்தல் நடத்தை விதிகளை மீறிய நாதக… இந்த தேர்தலில் முதல் வழக்குப்பதிவு… முழு விவரம் என்ன!
Naam Tamilar Party: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் அந்த விதிகளை மீறி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்திய கொள்கை பரப்பு இணைச் செயலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் விதிகளை மீறிய நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதில், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களில் இருந்த முதலமைச்சர் படம் உள்ளிட்டவை நீக்கப்பட்டன. இதே போல, தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், கட்சி தலைவர்களின் சிலைகள், கட்சிகளின் சின்னங்கள் ஆகியவை மறைப்புகள் கொண்டு மறைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல, அரசு நிகழ்ச்சிகள், அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை தேர்தல் முடியும் வரை நடத்தக்கூடாது. இதே போல, கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் உள்ளிட்டவை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திடம் முறையான முன் அனுமதி பெற வேண்டும். இதனை மீறி செயல்படும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி நாதக வேட்பாளர் அறிமுக கூட்டம்
இந்த நிலையில், தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நாம் தமிழர் கட்சியின் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்கான முன் அனுமதியை பெறாமல் அந்த கட்சியினர் மேற்கண்ட நிகழ்ச்சியை நடத்தியதாக புகார் எழுந்தது. அதன் பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரியான வேளாண் உதவி இயக்குனர் உதயகுமார் ஊத்துமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் படிக்க: அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. கரூர் உள்ளிட்ட 4 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்..
நாதக கொள்கை பரப்பு இணைச் செயலர் மீது வழக்குப்பதிவு
அதன் பேரில், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சரவணன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 2 பிரிவுகளின் கீழ் ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரிடம் போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15- ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. தற்போது, தேர்தல் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன.
இந்த தேர்தலில் முதல் வழக்குப்பதிவு
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வாக்குச் சாவடி முகவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்திய கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் மீது தமிழகத்தில் இந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இடி, மின்னலுடன் மழை கொட்டும்.. வெயிலும் கொளுத்தும்.. இன்றைய வானிலை அப்டேட் இதோ..