முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு ஏன்? தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதா?… செல்வப்பெருந்தகை விளக்கம்!
DMK- Congress Seat Sharing : முதல்வர் மு. க. ஸ்டாலினுடன், ப.சிதம்பரம் சந்தித்தது தொடர்பாகவும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாகவும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். இதில், திமுக தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார் .
சென்னையில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப. சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை ( மார்ச் 3) சுமார் ஒன்றரை மணி நேரமாக சந்தித்து பேசுவார்த்தை நடத்தி இருந்தனர். இதில், காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது. இதில், காங்கிரஸ் 39 சட்டமன்ற இடங்களையும், 2 மாநிலங்களவை சீட்டுகளை கேட்டதாகவும், அதற்கு திமுக தலைமை 25 சட்டமன்ற தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை சீட்டையும் தருவதாக கூறியதாக பரபரப்பாக பேசப்பட்டன. இதனால், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், முதல்வருடனான சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸுக்கு திமுக கெடு விதிக்கவில்லை
திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் சுமுகமான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக எங்களுக்கு கெடு விதிக்கவில்லை. முதல்வர் மு. க. ஸ்டாலினை, ப.சிதம்பரமும், நானும் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். திமுக 29 சட்டமன்ற தொகுதிகளையும், 2 மாநிலங்களவை உறுப்பினர் சீட்டையும் தருவதாக தகவல் வெளியானது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அப்படி எதுவும் இல்லை என்று தெரிவித்தார். திமுகவுடன் பேச்சு வார்த்தையில் இழுபறி இல்லை, திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “முதல்வர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?” நெல்லை கொலை சம்பவத்தை சுட்டிக் காட்டி விஜய் கேள்வி..




3 நாள்கள் கடந்தும் பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லை
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் திமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கிரிஷ் சோடங்கர் 3 நாட்களுக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். தற்போது, 3 நாட்கள் ஆகியும் திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இறங்கி வந்த காங்கிரஸ் – ஏறி வந்த திமுக
இந்த நிலையில், இறுதி கட்டமாக திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை மேற்கொள்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் மற்றும் செல்வப் பெருந்தகை ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், 39+2 என்ற நிலைப்பாட்டில் இருந்து காங்கிரஸ் 36+2 என்ற அளவுக்கு இறங்கி வந்ததாகவும், திமுக 25+1- இல் இருந்து 29+1 என ஏறி வந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஆகியவை குறித்து டெல்லி தலைமைக்கு ப. சிதம்பரம் தகவல் தெரிவித்து இன்று மாலைக்குள் இறுதி முடிவு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க: சென்னையில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகம்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..