நெருங்கும் தேர்தல்.. பிரதமர் வருகைக்கு தயாராகும் கன்னியாகுமரி.. பிரம்மாண்ட ரோடு ஷோவில் மோடி!
PM Narendra Modi: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 15- ஆம் தேதி கன்னியாகுமரியில் பிரம்மாண்ட ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளார். இதற்காக தனி விமானத்தில் வருகை தர உள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, சட்டமன்ற தேர்தலில் வெற்றியை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பரப்புரைக்காக தமிழகம் வந்திருந்தனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளார். அதன்படி, வருகிற ஏப்ரல் 15- ஆம் தேதி ( புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.
தனி விமானத்தில் தமிழகம் வரும் பிரதமர் மோடி
இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு ஏப்ரல் 15- ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வருகை தர உள்ளார். பிறகு, அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணி அளவில் நாகர்கோவிலுக்கு வருகை தர உள்ளார். இதற்காக அந்தப் பகுதியில் ஹெலிபேடு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு, பிரதமர் நரேந்திர மோடி வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி சாலை வரை பிரம்மாண்ட ரோடு ஷோ மேற்கொள்கிறார்.
மேலும் படிக்க: கனிமொழி பிரசார வாகனத்தில் ஏறி கேள்வி கேட்ட காவலரின் மனைவி.. போராட்டக் களமாக மாறிய பரப்புரை




பிரம்மாண்ட ரோடு ஷோவில் பிரதமர் மோடி
பின்னர், ரோடு ஷோவை முடித்துவிட்டு மாலை சுமார் 6 மணி அளவில் அங்கிருந்து பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து, தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றி இருந்தார்.
3- ஆவது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி
இதை தொடர்ந்து, மதுரை மாவட்டம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியிருந்தார். மேலும், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில், 3- ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். அத்துடன் நாகர்கோவிலில் பிரம்மாண்ட ரோடு ஷோவிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
மேலும் படிக்க: எடப்பாடி தொகுதியில் யாருக்கு ஆதரவு கொடுப்பது?.. குழப்பத்தில் தவெக தொண்டர்கள்!!