எடப்பாடி தொகுதியில் தவெக ஆதரவு யாருக்கு?.. குழப்பத்தில் தவெக தொண்டர்கள்!!
Tamilnadu Assembly Election: இதன் மூலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் யாரும் போட்டியிடவில்லை. தமிழகத்தில் மற்ற சட்டமன்றத் தொகுதிகளில் எல்லாம் விஜய்யின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாகத் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஆனால், எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக தொண்டர்கள் சோர்வடைந்து உள்ளனர்.
Tamilnadu Polls 2026: தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த 234 தொகுதிகளிலும் எவ்விதக் கூட்டணியுமின்றி தனித்து போட்டியிடும் தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான விசில் சின்னத்தில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார். ஆனால், பிரதான எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் சேலம் மாவட்டத்தின் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மட்டும் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், 233 தொகுதிகளில் மட்டுமே தவெக போட்டியிடும் என்ற நிலை உருவானது. இதனிடையே, வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதால் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தவெக ஆதரவு யாருக்கு? என்று தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி சட்டமன்றத் தொகுதி விஐபி தொகுதியாகும். ஏனென்றால், இந்தத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். மேலும் இந்தத் தொகுதியில் திமுக சார்பில் காசி, நாம் தமிழர் கட்சி சார்பில் பிரியதர்ஷினி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கோவிந்தராஜ் உள்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிக்க: பணம் இல்லை.. அது ஒன்னு தான்.. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமான பேச்சு!
தவெக வேட்பாளர் மனு நிராகரிப்பு:
இந்நிலையில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் சேலம் வலசையூரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் போட்டியிடுவார் என்று கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். அதன்பேரில் வேட்பாளர் அருண்குமார், எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி நடந்த வேட்புமனு மீதான பரிசீலனையின் போது, அவரது வேட்புமனுவில் முன்மொழிவோர் எண்ணிக்கை குறைவு உள்பட பல்வேறு குறைபாடுகள் இருந்தன. இதனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
தலைமறைவான தவெக வேட்பாளர்?
இதில் மிகப்பெரிய அரசியல் திருப்பம் என்னவென்றால், வேட்புமனு பரிசீலனை நடைபெற்ற நாளில் வேட்பாளர் அருண்குமார் திடீரென மாயமானார் என்று கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதே தொகுதியில் போட்டியிடுவதால், அவருக்கு எதிராக பதிவாகும் வாக்குகள் பிரிந்துவிட கூடாது என்பதற்காக, எதிர்க்கட்சி தரப்பிலிருந்து தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கிவிட்டதாக தமிழக வெற்றிக் கழக வட்டாரங்களில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வளவு பெரிய கோட்டையான எடப்பாடியில் சரியான, பலமான வேட்பாளரை நிறுத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது
யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் குழப்பம்:
இதன் மூலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் யாரும் போட்டியிடவில்லை. தமிழகத்தில் மற்ற சட்டமன்றத் தொகுதிகளில் எல்லாம் விஜய்யின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாகத் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஆனால், எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக தொண்டர்கள் சோர்வடைந்து உள்ளனர். அந்தத் தொகுதியில் உள்ள விஜய் ரசிகர்களும் களையிழந்து காணப்படுகின்றனர். குறிப்பாகத் தொண்டர்கள் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இதுவரை தலைவர் அறிவிக்காததால் குழப்பத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க: “அடுத்த 10 நாட்கள் மிக முக்கியம்”.. தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட கட்டளை.. அதிரும் தேர்தல் களம்!!
தேர்தல் பணியாற்ற முடியாமல் தவிப்பு:
இதுகுறித்து தவெக. நிர்வாகிகள் கூறும் போது, ‘எடப்பாடி தொகுதியில் சிறப்பாகத் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு தொண்டரும் உற்சாகத்தில் இருந்தோம். ஆனால் எங்களது தொகுதி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்ற தகவலைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தோம். இதனால் கட்சிக்காகப் பணியாற்ற முடியாமல் தவித்து வருகிறோம். மேலும் நாங்கள் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தெரியாமலும் உள்ளோம்’ என்றனர்.