திமுக களமிறக்கிய 7 பேர் குழு… நாளை முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. யார் யார் இடம் பெற்றுள்ளனர்!
DMK Seat Sharing Committee : திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகிக்க கூடிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை திமுகவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் அமைத்து உத்தரவிட்டுள்ளார் .
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் படு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. இதில், அரசியல் கட்சிகள் மத்தியில் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை, கட்சி விட்டு கட்சி மாறுவது, மாற்றுக் கட்சியினரின் தலைவரை சந்திப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் கிட்டத்தட்ட கூட்டணி உருவாகிவிட்ட நிலை உள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் சில கட்சிகள் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திமுகவில் தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைக்கப்படாமல் இருந்தது. இதனால், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் இருந்து வந்தது.
திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு
இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவை அமைத்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், டி. ஆர். பாலு. எம்.பி. தலைமையில், நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு, திருச்சி சிவா எம் பி, ஆ. ராசா எம்பி, திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு, விவசாயத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவானது நாளை ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 22 ) முதல் திமுக கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையை தொடங்க உள்ளது.
மேலும் படிக்க: ரூ.1,020 கோடி ஊழல்.. “அமைச்சர் கே.என்.நேருவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்”.. விஜய் வலியுறுத்தல்





திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பு
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கட்சிகள்
தற்போது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. இதில், சில கட்சிகள் திமுக தலைமையிடம் கூடுதல் தொகுதிகள் கேட்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டும் அழுத்தம் கொடுத்து வருகிறது. தொகுதி பங்கீடு குறித்த பேச்சு பல மாதங்களுக்கு முன்பே திமுக கூட்டணியில் எழுந்தது.
தொகுதி பங்கீடு குறித்த குரல்
கடந்த சில நாட்களாக காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை கூடுதல் தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், திமுக தலைமை அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்து வந்தது. இதனிடையே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை அமைக்குமாறு காங்கிரஸ் தலைமை வலியுறுத்தி இருந்தது. அதற்கும், திமுக தலைமை செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மதுரையில் நடைபெறும் திமுக தேர்தல் முகவர்கள் மாநாடு.. சிறப்புரையாற்றும் முதல்வர் ஸ்டாலின்..