கழுத்தில் அணிந்திருந்த விசில்.. திமுகவினர் திடீர் பிடிவாதம்.. திகைத்து நின்ற துணை ராணுவ வீரர்கள்!
Whistle Symbol: தமிழக சட்டமன்ற தேர்தலில் கரூர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ படை வீரர்கள் வைத்திருந்த விசிலை அகற்ற கோரி திமுகவினர் பிடிவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த வாக்குச்சாவடிகளில் பதற்றம் தொற்றிக் கொண்டது.
தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழல் நிலவியதுடன், சில வாக்குச்சாவடிகளின் சுவாரசியமான சம்பவங்களும் அரங்கேறின. இதில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலை முதல் ஏராளமான பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ படையினர் தங்களது சீருடையில் விசிலை பொருத்தியிருந்தனர். இதனைப் பார்த்த திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் தமிழ் தெரியாத அந்த பாதுகாப்பு படை வீரரிடம் விசிலை அகற்றுமாறு ஆக்ரோஷமாக கூறினார். இதனை எதிர்பாராத அந்த நபர் சற்று அதிர்ச்சியில் உறைந்து போனார். அப்போது, திமுகவைச் சேர்ந்த நபர் கூறுகையில், பாதுகாப்பு படை வீரர் வைத்திருப்பது அரசியல் கட்சியின் சின்னமாகும்.
அரசியல் கட்சியின் சின்னமான விசில்
அவர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் அரசியல் கட்சியின் சின்னத்தை பயன்படுத்தக் கூடாது. இவர் வைத்திருப்பது கார்ப்பரேஷன் விசில் ஆகும். விசில் தேவை எனில், போலீஸ் விசிலை பயன்படுத்த வேண்டும். உடனே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக போலீசார் அந்த நபரிடம் சமரசத்தில் ஈடுபட்டனர். பின்னர், பாதுகாப்பு படை வீரரிடம் விசிலை அகற்றுமாறு தமிழக போலீசார் கூறினர். இதைத் தொடர்ந்து, அந்த பாதுகாப்பு படை வீரர் தனது விசிலை சீருடைகள் இருந்து அகற்றினார். பின்னர், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் படிக்க: Tamil Nadu Election Voting: தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. தனி ஆளாக வாக்களித்த இளம் பெண்..




துணை ராணுவ வீரர் விசிலால் பரபரப்பு
இதே போல, சென்னை, பெரம்பூர் தொகுதியில் மகாகவி பாரதியார் நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி பகுதியில் ஏராளமான வாக்காளர்கள் வாக்களிக்க வந்த காரணத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டது. இதனை பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவ வீரர் ஒருவர் விசில் ஊதி போக்குவரத்தை சீரமைத்துக் கொண்டிருந்தார். அப்போது, காவல் துணை ஆணையர் பதவியில் இருக்கும் போலீசார் மற்றும் சில கட்சியினர் மத்திய துணை ராணுவ படை வீரரிடம் நீங்கள் அணிந்திருப்பது ஒரு கட்சியின் சின்னமாகும்.
தமிழ் தெரியாமல் விழி பிதுங்கி நின்ற ராணுவ வீரர்
எனவே, அந்த விசிலை அகற்றுமாறும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியை நாங்கள் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். தமிழ் தெரியாத அந்த துணை ராணுவ வீரர் எதுவும் புரியாமல் சற்று விழி பிதுங்கி நின்றார். பின்னர், ஒரு கட்டத்துக்குப் பிறகு துணை ராணுவ படை வீரர் தான் கழுத்தில் அணிந்திருந்த விசிலை அகற்றினார். இந்த இரு நிகழ்வுகள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: துறைமுகம் தொகுதயில் அமைச்சர் சேகர் பாபு – தவெக வேட்பாளரிடையே மோதல்