6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் காத்திருந்து வாக்களிக்கலாம் – சென்னை தேர்தல் அலுவலர் குமரகுருபரன்..
Tamil Nadu Assembly Election: சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இரவு 8 மணி, 9 மணி ஆகிய நேரங்களிலும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, ஏப்ரல் 23, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் நுழைந்தவர்கள் வரிசையில் காத்திருந்து இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் அறிவித்துள்ளார்.
2026 ஜனநாயக திருவிழா:
2026 சட்டமன்றத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 82% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. அதாவது திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை முக்கிய போட்டியாளர்களாக உள்ளன.
மேலும் படிக்க: வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!
காலை முதல் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்:
இந்த தேர்தலில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு முன்பு 6 கோடிக்கு மேல் இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை, இந்த பணிகளுக்குப் பிறகு 5.73 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்து வாக்களித்துள்ளனர். கடும் போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
சென்னையில் 9 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு:
மேலும், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இரவு 8 மணி, 9 மணி ஆகிய நேரங்களிலும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) கருவிகளை சீல் வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் 90% ஐ கடந்த வாக்குப்பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.