அதிமுக பாஜக தொகுதி பங்கீடு.. இத்தனை தொகுதிகளா? ஷாக்கான அதிமுக தலைமையகம்..

ADMK - BJP Alliance: இந்த சூழலில், டிசம்பர் 15, 2025 தேதியான நாளை மறுநாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இந்த வருகையின் போது, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

அதிமுக பாஜக தொகுதி பங்கீடு.. இத்தனை தொகுதிகளா? ஷாக்கான அதிமுக தலைமையகம்..

கோப்பு புகைப்படம்

Published: 

13 Dec 2025 19:07 PM

 IST

டிசம்பர் 13, 2025: 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்தத் தேர்தலில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்றால், அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணியில் தன்னை இணைத்துள்ளது. இந்த சூழலில், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் பாஜக 53 இடங்களை கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக, தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, எப்படியாவது இந்த முறை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதே சமயத்தில், தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவும் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, கடும் போட்டி நிலவி வருகிறது.

மேலும் படிக்க: நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா? லிஸ்ட் போட்ட அமைச்சர்!

அதிமுக பாஜக கூட்டணி பின்னணி:

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேர்தலை சந்தித்தன. அப்போது பாஜகவில் எல். முருகன், அண்ணாமலை, குஷ்பூ, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் போட்டியில் கலந்து கொண்டனர். ஆனால், அதில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சரஸ்வதி மற்றும் காந்தி என நான்கு பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். பிரபலமான பலர் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் சட்டப்பேரவையில் நுழைந்தது.

பின்னர், அப்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. ஆனால், அந்தத் தேர்தலில் அதிமுகவோ அல்லது பாஜகவோ ஒரு இடத்தைக் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஓபிஎஸ்-டிடிவிக்கு நோ சொன்ன இபிஎஸ்…அதிருப்தியில் பாஜக…அடுத்த நகர்வு என்ன!

தேர்தலுக்கு ஆயத்தமாகும் பாஜக:

இதனைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தந்த போது, அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில், பாஜக மேலிட நிர்வாகிகள் அவ்வப்போது தமிழகத்திற்கு வருகை தந்து, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தனர். அதேபோல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலும் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த சூழலில், டிசம்பர் 15, 2025 தேதியான நாளை மறுநாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இந்த வருகையின் போது, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\

அதிமுக கூட்டணியில் 53 இடங்களை கேட்கும் பாஜக:

அதாவது, அதிமுக தலைமையிடத்தில் பாஜக தரப்பில் போட்டியிட விரும்பும் தொகுதிகளை கேட்டுப் பெறுவதற்காக அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு தேர்தலை எடுத்துக் கொண்டால், பாஜகவிற்கு அதிமுக கூட்டணியில் 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலில், பாஜக இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்த்தி 53 தொகுதிகளை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பாக, சென்னையில் எட்டு இடங்கள் கேட்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

சென்னையில் துறைமுகம் தொகுதியில் பாஜக கணிசமான வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு அதிக வாக்குகள் கிடைத்த தொகுதிகளை பட்டியலிட்டு, அந்த தொகுதிகளுடன் மேலும் பல தொகுதிகளை இணைத்து கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, தற்போதைய கள நிலவரத்தின் அடிப்படையில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் வலுவாக உள்ளது என்பதைக் கணக்கிட்டு, அந்தப் பட்டியலை அதிமுகவிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 234 தொகுதிகளில் 53 தொகுதிகளை பாஜக கேட்க உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அதிமுக வட்டாரங்களில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் எல்என்ஜி - டீசல் ரயிலை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே
பீகாரில் இனி அரிசி, கோதுமை ஏடிஎமிலேயே கிடைக்கும் - அறிமுகமாகவிருக்கும் தானிய ஏடிஎம்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்?.. செளந்தர்யா சொன்ன நச் தகவல்!!
திரைத்துறை நண்பனுக்கு பிறந்தநாள்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொன்ன மோகன்லால்..