கலால் வரி குறைக்கப்பட்டும் பெட்ரோல், டீசல் விலைகள் குறையவில்லை – காரணம் என்ன?
Petrol Diesel Update : கச்சா விலை உயர்ந்துள்ள நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இருப்பினும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாமல் அப்படியே தொடர்கிறது. இதற்கான கராரணம் குறித்து இந்த கட்டுரையில் வரிவாக பார்க்கலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இது லிட்டருக்குச் சரியாக ரூ.10 என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.13லிருந்து ரூ.3 ஆகக் குறைந்துள்ளது. மேலும் டீசல் மீதான கலால் வரி ரூ.10 ஆக இருந்த நிலையில் அது முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை உலகளவில் உயர்ந்து வரும் நிலையில், எரிபொருள் நிறுவனங்கள் விலை ஏற்றாமல் தடுக்க மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாததற்கு காரணம் என்ன?
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ளன. இதனையடுத்து நாயரா எனர்ஜி நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. அரசுக்குச் சொந்தமான எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் விலைகளை உயர்த்தவில்லை. இதன் காரணமாக இந்த நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்தால், இந்தியன் ஆயில், ஹெச்பி, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
இதையும் படிக்க : குழாயில் வரும் கேஸ்.. எல்பிஜிக்கு மாற்றாகும் பிஎன்ஜி.. எப்படி கிடைக்கும்? அரசு சொல்வது என்ன?
அப்படி உயர்த்தப்பட்டால், அனைத்து பொருட்களின் விலையும் உயரக்கூடும். இது சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கும். இதன் காரணமாக அரசு கலால் வரியைக் குறைத்துள்ளது. இந்த வரிக்குறைப்பின் காரணமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறையாது. மாறாக, இது எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் தங்கள் நஷ்டத்தைக் குறைத்துக்கொள்ள உதவும். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை சாமானிய மக்களுக்கு வழக்கமான விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும்.
அரசு கலால் வரியைக் குறைத்துள்ளதன் மூலம், எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் ஒரே நேரத்தில் நிவாரணம் கிடைக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்காது. இதனால் சாமானிய மக்கள் விலை உயர்வை எதிர்கொள்ள வேண்டியிருக்காது. இருப்பினும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வேறு சில வரிகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
இதையும் படிக்க : பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடியாக குறைப்பு.. விலை குறைய வாய்ப்பு?
ஈரான் போருக்கு முன்பு, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 60 டாலராக இருந்தது. தற்போது அது 100 டாலர், 120 டாலர் என்ற அளவுகளைக் கடந்துவிட்டது. ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் டேங்கர்களுக்கு ஏற்பட்ட தடையின் காரணமாக, எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.



