பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடியாக குறைப்பு.. விலை குறைய வாய்ப்பு?
Excise Duty On Petrol & Diesel Cut: சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர் நடவடிக்கைகளால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு இன்று அதிரடியாகக் குறைத்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டின் மீதான கலால் வரியும் லிட்டருக்கு தலா 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13ல் இருந்து ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், டீசல் மீதான கலால் வரி ரூ.10ல் இருந்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டு பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால்ல வரி குறைப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : 10 கிலோவாக குறைக்கப்படும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்?.. மத்திய அரசு விளக்கம்!
நெருக்கடியும் பின்னணியும்:
சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர் நடவடிக்கைகளால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ஈரான் அரசு ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கடல்சார் முற்றுகையை அறிவித்துள்ளது. உலகின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பகுதி (தினசரி 20 முதல் 25 மில்லியன் பேரல்கள்) இந்த மிக முக்கியமான வழித்தடம் வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
இந்தியா மீதான தாக்கம்:
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40 முதல் 50 சதவீதம் (தினசரி 2.2 முதல் 2.8 மில்லியன் பேரல்கள்) இந்தப் பாதை வழியாகவே வருகிறது. கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து இந்தியா வாங்கும் திரவ இயற்கை எரிவாயுவில் (LNG) 16 முதல் 17 சதவீதம் இந்தப் பாதை வழியாகவே கொண்டு வரப்படுகிறது. மேலும், 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG), கத்தார் மற்றும் ஈரானிடம் இருந்து இந்தப் பாதை வழியாகவே இறக்குமதி செய்யப்படுகிறது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இந்தத் தடையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், உள்நாட்டு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த வரி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்
மத்திய அரசு கொடுத்த விளக்கம்:
ஈரான் போரினால் நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்று கவலைகள் எழுந்தன. எனினும், உடனடியாக எந்த ஆபத்தும் இல்லை என்று அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. நேற்று அரசு வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் சுமார் 60 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் கையிருப்பு உள்ளது. 30 நாட்களுக்குத் தேவையான எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகம் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகள், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி செயற்கையாகப் பொருட்களை வாங்கத் தூண்டும் ‘திட்டமிட்ட தவறான பிரச்சாரம்’ என்று அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.