Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தபால் நிலையங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி – எப்போது நடைமுறைக்கு வரும்?

UPI at Post Offices : இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு வழிவகுக்கும் வகையில், யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. குறிப்பாக டைனமிக் கியூஆர் கோட் வசதிகள் மூலம் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த கட்டுரையில் மேலும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

தபால் நிலையங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி – எப்போது நடைமுறைக்கு வரும்?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 28 Jun 2025 17:08 PM

இந்தியாவில் ஒரு காலத்தில் மாநகரங்கள் தொடங்கி, கிராமங்கள் வரை கடிதங்கள் மட்டுமே தொடர்பு கருவியாக இருந்த நிலையில் இன்று முழுமையாக டிஜிட்டல் மயமாக மாறியிருக்கிறது. அந்த வகையில் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை வழங்கும் தபால் துறையும் டிஜிட்டல் உலகில் அடியெடுத்து வைக்கிறது. அதன் ஒரு பகுதியாக தபால் அலுவலகங்களில் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவிருக்கிறது. இதன் மூலம் தபால் அலுவலகங்களில் சேவைகளை பெற இனி யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். பிடிஐயில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த நடைமுறை வருகிற 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரவிருக்கிறது.

 புதிய முயற்சியின் முக்கிய அம்சங்கள்:

இதற்காக ஐடி 2.0 என்ற திட்டம் அமல்படுத்தப்படவிருக்கிறது. இது தபால் துறையின் தற்போதைய தகவல் தொழில்நுட்ப  அம்சங்களை மேம்படுத்தி நவீன மயமாக்கும் புதிய திட்டமாகும்.  இதில் முக்கியமாக, டைனமிக் கியூஆர் (QR) கோட் வசதி அடங்கும். இதன் மூலம், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனிப்பட்ட கியூஆர் கோட் உருவாக்கப்படும், இதன் மூலம் தவறான பரிவர்த்தனைகள், அல்லது பொதுவான கியூஆர் கோட்களால் ஏற்படும் குழப்பங்கள் தவிர்க்கப்படும்.

இந்த புதிய வசதியை முதலில் கர்நாடக மாநிலத்தில் ஒரு பைலட் திட்டமாக தபால் துறை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி, அங்குள்ள மைசூரின் தபால் நிலையத்திலும், பாகல்கோட் தலைமையகத்திலும், மற்றும் அதற்குட்பட்ட துணை தபால் நிலையங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாடிக்களையாளர்கள் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி கியூஆர் கோட்களை ஸ்கேன் செய்து பணம் செலுத்தி சேவைகளைப் பெறலாம்.

டைனமிக் கியூஆர் கோட் முக்கியத்துவம் என்ன?

முன்னதாக  தபால் நிலையங்களில் ஸ்டாட்டிக் கியூஆர் கோட்கள் பயன்படுத்தப்பட்டபோதும், பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் புகார்கள் காரணமாக அந்த சேவை நிறுத்தப்பட்டது. ஸ்டாட்டிக் கியூஆர் கோட்களில், அனைத்து பரிவர்த்தனைகளும் ஒரே கோட் மூலமாகச் செயல்படுத்தப்பட்டதால் கணக்கில் குழப்பங்கள் ஏற்பட்டன. ஆனால், புதிய டைனமிக் கியூஆர் கோட் முறையில், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனித்துவமான கியூஆர் கோட் உருவாக்கப்படும். இது பாதுகாப்பை உறுதி செய்யும். இந்த புதிய அப்டேட், முந்தைய குறைபாடுகளை சரி செய்து, வாடிக்கையாளர்களுக்கு வேகமான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை வழங்குவதே நோக்கம்.

இந்த முயற்சி அஞ்சல்துறையின் மிகப் பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. இந்தியாவின் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை உள்ள அஞ்சலகங்களிலும் இனி பணம் கொடுத்து சேவைகளைப் பெறுவதற்கு பதிலாக  டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது என்பது மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.