Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மோசமான சிபில் ஸ்கோர்… பணிக்கு தேர்வானவரின் நியமனம் ரத்து – உயர்நீதிமன்றம் எஸ்பிஐக்கு ஆதரவு

CIBIL Alert: மோசமான சிபில் ஸ்கோர் காரணமாக பணிக்கு தேர்வான நபரின் நியமனத்தை ரத்து செய்த ஸ்டேட் வங்கியின் முடிவை சென்னை உயர்நீதிமன்றம் சரியானது என தீர்மானித்துள்ளது. நிதி ஒழுங்கு இல்லாத நபர் மீது பொது நம்பிக்கையை வைத்து வங்கி பணிகளை வழங்க முடியாது என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மோசமான சிபில் ஸ்கோர்… பணிக்கு தேர்வானவரின் நியமனம் ரத்து – உயர்நீதிமன்றம் எஸ்பிஐக்கு ஆதரவு
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 30 Jun 2025 15:06 PM

மோசமான சிபில் ஸ்கோர் (Cibil Score) காரணமாக பணியாளரின் நியமனத்தை ரத்து செய்த ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பணத்தை கையாளும் வங்கித் துறையில் நிதி ஒழுங்கு மிகவும் முக்கியம் என்பதே நீதிமன்றத்தின் முக்கியக் கருத்தாகும். ஒருவர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் சர்கிள் பேஸ்டு ஆஃபிசர் பதவிக்கான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றார். ஆனால் நியமனம் நடைபெறும் தருணத்தில் அவரது சிபில் ஸ்கோர் (CIBIL Score) சோதிக்கப்பட, அதில் பல கடன் தவறுகள்,  தாமதமாக கட்டணம் செலுத்துதல் போன்ற விபரங்கள் இடம்பெற்றிருந்ததாகவும், இது அவரது நிதி ஒழுங்கில் குறைபாடுகளை காட்டுவதாகவும் கூறி, ஸ்டேட் வங்கி,  அவரது பணி நியமனத்தை ரத்து செய்திருக்கிறது.

இந்த நிலையில் அந்த நபர் தான் பணிக்கு விண்ணப்பிக்கும்போது தன்னிடம் எந்த வித கடன் நிலுவைத் தொகையும் இல்லை என்றும் இதுபோன்ற நிலைமையில் உள்ள சிலர் பணிக்கு நியமிக்கப்படடாகவும், தனக்கு அநீதி நேர்ந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் விளக்கம்

வங்கியின் ஆட்சேர்ப்பு விதிமுறைகளில் உள்ள 1(E) பிரிவு படி, கடன் தவறுகள் அல்லது மோசமான சிபில் வரலாறு கொண்டவர்கள் தகுதி இல்லாதவர்களாக கருதப்படுவார்கள் எனும் நிபந்தனை உள்ளது. அவரின் சிபில் ஸ்கோர் ரிப்போர்ட்டில் 10க்கும் மேற்பட்ட கடன் விசாரணைகள், தவறான கணக்குகள் ஆகியவை உள்ளன. மேலும், இந்த விவரங்களை விண்ணப்பத்தின் போது அவர் மறைத்ததாகவும் வங்கி குற்றம் சாட்டியது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.மாலா அளித்த தீர்ப்பில், “வங்கியில் பணிபுரிபவர்கள் பொதுமக்களின் பணத்தை கையாளுகின்றனர். அவர்களிடம் நம்பிக்கை இருக்க வேண்டியது அவசியம். நிதி ஒழுங்கு இல்லாத நபர்களிடம் அந்த நம்பிக்கையை வைக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் விண்ணப்பதாரர் கூறியதை ஏற்க முடியாது எனவும் அவரது குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் கூறினார். விதிகளுக்கு உட்பட்டே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பணியாளர்களை தேர்வு செய்வதாகவும் கூறி நீதிமன்றம் வழக்கை தள்ளுடி செய்தது.

இந்த தீர்ப்பு, வங்கித் துறையின் நம்பகத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வலியுறுத்தும் வகையில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் பணத்தை கையாளும் பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு நிதி ஒழுங்கு மிக அவசியமானது என்பதையே சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சிபில் ஸ்கோர் போன்ற நிதி மதிப்பீடுகள், பணியாளரின் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்யும் கருவியாக அமைந்துள்ளது. ஆகவே, வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், தங்கள் நிதி ஒழுங்கை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதையும், அவர்களது கடன் வரலாறு எதிர்கால வாய்ப்புகளுக்கு பாதிப்பாக இருக்கக்கூடும் என்பதையும் இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது.