Fixed Deposit திட்டங்கள் இனி இப்படி தான் செயல்பட வேண்டும்.. வங்கிகளுக்கு ஆர்பிஐ வைத்த செக்!
Reserve Bank Of India Revised Fixed Deposit Rules | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான விதிகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) அவ்வப்போது பல புதிய விதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர்கள் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வது தொடர்பான புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 01, 2026 முதல் அமலுக்கு வர உள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. இந்த நிலையில், பணம் டெபாசிட் குறித்து ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய விதிகள் என்ன, அந்த விதிகள் டெபாசிட் திட்டங்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ள புதிய டெபாசிட் விதிகள் – என்ன என்ன?
வங்கியில் பணம் டெபாசிட் செய்வது தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள முக்கிய விதிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வங்கியின் அனைத்து கிளைகளிலும் ஒரே வட்டி
தற்போது ஒரு வங்கியின் வெவ்வேறு கிளைகளில் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு வெவ்வேறு விதமான வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய விதிகளின் மூலம் ஒரு வங்கியின் அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான வட்டி விகிதம் மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என்று ஆர்பிஐ கூறியுள்ளது.




இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் குறித்து அமலுக்கு வந்த முக்கிய விதிகள்.. என்ன என்ன?
இணையதளத்தில் பதிவிட வேண்டும்
வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகித பட்டியலை வழங்குவதற்கு முன்னதாகவே, தங்கள் இணையதளத்தில் வட்டி விகிதம் குறித்து தெளிவாக பதிவிட வேண்டும். மேலும், வங்கிகள் தாங்கள் அறிவித்த விகிதத்தின் அடிப்படையில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வட்டி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு.. எவ்வளவு தெரியுமா?
பல்க் டெபாசிட் வட்டி விகிதங்களுக்கு வங்கிகளுக்கு நெகிழ்வுத்தன்மை
பல்க் டெபாசிட் (Bulk Deposit) எனப்படும் மொத்த வைப்புத்தொகை திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்துக்கொள்ள வங்கிகளுக்கு நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு வேலை நாளும் காலை 10 மணிக்கு இந்த வட்டி விகிதங்களை வங்கிகள் தங்களின் இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று ஆர்பிஐ கூறியுள்ளது.