டவுன்லோடு செய்த இ-ஆதார் கார்டு செல்லுபடியாகுமா? மத்திய அரசு விளக்கம்
All Aadhaar Forms Valid : ஆதார் கார்டு என்பது அனைத்து விதமான அரசு சேவைகளையும் பெற மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இந்த நிலையில் டவுன்லோடு செய்யப்படும் இ-ஆதார் கார்டு அசல் கார்டை போல செல்லுபடியாகுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் அடையாள ஆவணங்களில் மிகவும் முக்கியமானதாக விளங்கும் ஆதார் கார்டு அனைத்து விதமான அரசு சேவைகளையும் பெற மிக முக்கியமான விளங்குகிறது. இந்த நிலையில் ஆதார் கார்டுகள் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. டவுன்லோடு செய்யப்படும் இ-ஆதார், மொபைலில் இருக்கும் செயலியான எம்-ஆதார் (m-Aadhaar) உள்ளிட்ட அனைத்து வடிவங்களும் சமமாக செல்லுபடியாகும் என தனித்துவ அடையாள ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
டவுன்லோடு செய்த இ-ஆதார் கார்டு செல்லுபடியாகுமா?
இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பின்படி, தபால் மூலம் வழங்கப்படும் அசல் ஆதார் அட்டைக்கு நிகராக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் இ-ஆதாருக்கும் மதிப்பு உண்டு என தெளிவுபடுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000ன் கீழ், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் படி டிஜிட்டல் கையொப்பத்துடன் கிடைக்கும் இந்த இ-ஆதார் ஆவணம் முழுமையாக நம்பகமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : இனி இந்த பண பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாம்.. பான் கார்டு விண்ணப்பத்திலும் மாற்றம்!




ஆதார் அட்டை ஒரு நபரின் பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண்ணை கொண்ட முக்கிய ஆவணம் ஆகும். இது வங்கி கணக்கு திறப்பு, புதிய சிம் கார்டு வாங்குதல், அரசின் நலத்திட்டங்களைப் பெற என பல்வேறு தேவைகளுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. இது இந்திய குடிமகன் ஒருவரின் விவரங்கள் அடங்கிய அடையாள ஆவணமாகும்.
மேலும், ஆதார் கார்டில் உள்ள கியூஆர் கோட் மூலம் ஆதாரின் உண்மைத்தன்மையை எளிதில் சரிபார்க்க முடியும். இது பிவிசி ஆதார் கார்டை விட பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அதேபோல், ஏடிஎம் கார்டு போல வழங்கப்படும் பிவிசி ஆதார் அட்டையும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக எம்-ஆதார் கார்டு செயலியில் மாஸ்க்ட் ஆதார் என்ற வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே தெரியும். ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களில் இதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இணைய வசதி இல்லாத இடங்களிலும் அடையாளத்தை உறுதிப்படுத்த இ-ஆதார் கார்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கைரேகை சரியாக பதியாதவர்களுக்கு Face Authentication முறை உதவிகரமாக உள்ளது.
இதையும் படிக்க : சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. அரசு அறிவிப்பு!
மேலும், இ-ஆதார் அல்லது டிஜிட்டல் ஆதாரை ஏற்க மறுக்கும் அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் கூட, மொபைலில் உள்ள எம்-ஆதார் என்ற செயலியைக் காட்டினால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், ஆதார் கார்டு இன்று ஒரு அடிப்படை தேவைகளில் ஒன்றாக, முழுமையான டிஜிட்டல் அடையாள முறையாக வளர்ந்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பான டிஜிட்டல் ஆதார் வடிவங்களை பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.