சூடாகும் உலகம்.. நிலச்சரிவில் புதைந்த சுவிட்சர்லாந்து கிராமம்.. இமயமலைக்கு எச்சரிக்கை!
Swiss Village Destroyed : சுவிட்சர்லாந்தின் பிளாட்டன் கிராமம் 2025 மே 28 அன்று பெரும் பனிப்பாறை சரிவால் 90% அழிந்துள்ளது. விஞ்ஞானிகளின் முன்னறிவிப்பின் பேரில் மக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ஆனால் ஒருவர் காணாமல் போயுள்ளார். உறைபனி உருகுவதே சரிவுக்குக் காரணம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சுவிட்சர்லாந்தின் அழகிய பள்ளத்தாக்குகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பிளாட்டன் கிராமம் 2025, மே 28ம் தேதி ஒரு பயங்கரமான இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டது. தென்மேற்கு சுவிட்சர்லாந்தின் லோட்சென்டல் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் ஆல்ப்ஸ் மலையிலிருந்து ஒரு பெரிய பனிப்பாறை உடைந்து விழுந்தது, இதனால் ஆயிரக்கணக்கான டன் பனி, மண் மற்றும் பாறை குப்பைகள் கிராமத்தை நோக்கி பாய்ந்தன. நிலச்சரிவு ஏற்படுவதற்கான அபாயத்தைக் கருத்தில் கொண்டு உள்ளூர் நிர்வாகம் ஏற்கனவே கிராமத்தை காலி செய்திருந்தது, இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது, ஆனால் கிராமத்தின் 90% நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிளாட்டன் மேயர் மத்தியாஸ் பெல்வால்ட், உணர்ச்சிவசப்பட்டு தனது வருத்தத்தை பதிவு செய்தார். ‘நாங்கள் எங்கள் கிராமத்தை இழந்துவிட்டோம். அந்த கிராமம் மண்ணுக்கு அடியில் இருக்கிறது. அதனை மீண்டும் கட்டி எழுப்புவோம் என்றார். அதே நேரத்தில், வாலாய்ஸ் மாகாண அதிகாரி ஸ்டீபன் கன்சர் கூறுகையில், முழு கிராமத்தின் பெரும்பகுதியும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான பாறைகளும் சேறும் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. இந்த விபத்து நினைத்துப் பார்க்க முடியாதது எனக் குறிப்பிட்டுள்ளார்.




விஞ்ஞானிகளின் எச்சரிக்கை
இயற்கை பேரழிவுக்கு முன்பே, விஞ்ஞானிகள் 2025, மே 19 ஆம் தேதியே ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தனர். மலையின் பின்னால் விரிசல்கள் தோன்றத் தொடங்கியிருந்தன, மேலும் பனிப்பாறை சரியும் அபாயம் இருந்தது. இதன் அடிப்படையில் முழு கிராம மக்களும் சரியான நேரத்தில் வெளியேற்றப்பட்டனர். கிராமத்தில் வசிக்கும் சுமார் 300 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், ஆனால் ஒருவரை இன்னும் காணவில்லை, அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பனிப்பாறை ஏன் வெடித்தது?
மலையின் நிலைத்தன்மையை பலவீனமானதே காரணமாக பார்க்கப்படுகிறது. உறைபனி உருகியதால் இந்த பேரழிவு ஏற்பட்டதாக சுவிஸ் சுற்றுச்சூழல் விஞ்ஞானி கிறிஸ்டியன் ஹுகல் நம்புகிறார். கடந்த நூற்றாண்டில் சுவிஸ் ஆல்ப்ஸ் மலைகளில் இதுபோன்ற பேரழிவு காணப்பட்டதில்லை என்று அவர் கூறினார். காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, பனிப்பாறைகளின் நிலை மிகவும் நிலையற்றதாகி வருவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
நிலச்சரிவில் புதைந்த கிராமம்
Glacier collapse buries 90% of Swiss village, person missing https://t.co/Mtm6qvMMIH pic.twitter.com/GbgWGUTTRZ
— Oppenheimer Ranch Project (@Diamondthedave) May 29, 2025
இமயமலை நிலைமை என்ன?
இமயமலைப் பகுதியும் இந்த நெருக்கடியால் பாதிக்கப்படாமல் இல்லை. 2013 ஆம் ஆண்டு கேதார்நாத்தில் உள்ள பனிப்பாறை ஏரி வெடித்து பலர் கொல்லப்பட்டனர். 2023 ஆம் ஆண்டில், சிக்கிமில் உள்ள தெற்கு லோனாக் பனிப்பாறையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போனார்கள். வெப்பநிலை 1.5°C க்கு மேல் உயர்ந்தால், இமயமலை பனிப்பாறைகள் வேகமாக உருகும் என்றும், பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் (GLOFs) இன்னும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் IPCC அறிக்கை தெரிவிக்கிறது.