5 பவுன் நகைக்காக வரதட்சணை கொடுமை…கணவரே ஆபாச படம் எடுத்து மிரட்டல்…இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!
Dowry Harassment Woman Suicide: 5 பவுன் தங்க நகை வரதட்சணை கேட்டு இளம் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ளது பக்கிரி பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் நாராயணமூர்த்தி. இவரது மகள் பிரியங்கா (30 வயது). அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பிரியங்காவுக்கும், புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் பகுதியை சேர்ந்த நபருக்கும் கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, மணமகன் வீட்டாருக்கு வரதட்சனை பொருட்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மேலும் வரதட்சனை வேண்டும் என்று பிரியங்காவின் கணவர் வீட்டார் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இரு வீட்டார் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. மேலும், பிரியங்காவுக்கும் அவரது கணவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்
இதனால், பிரியங்கா தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென பிரியங்கா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அவரது பெற்றோர் பிரியங்காவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரியங்கா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் படிக்க: சென்னையில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்…காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!




மகளுக்கு கணவர் வீட்டார் வரதட்சணை கொடுமை
இந்த சம்பவம் தொடர்பாக பிரியங்காவின் தாய் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், எனது மகள் பிரியங்காவுக்கு திருமணம் நடைபெற்ற போது, 10 பவுன் கொடுப்பதாக மாப்பிள்ளை வீட்டாரிடம் தெரிவித்திருந்தோம். ஆனால், அப்போதைய நேரத்தில் 5 பவுன் தங்கம் மட்டுமே வரதட்சணையாக கொடுக்க முடிந்தது. மீதமுள்ள 5 பவுன் நகையை கொடுக்க வேண்டும் என்று எனது மகளை அவரது கணவர் வீட்டார் வரதட்சனை கொடுமை செய்து வந்தனர்.
மனைவியை ஆபாச படமெடுத்து மிரட்டிய கணவர்
மேலும், எனது மகள் பிரியங்காவை அவரது கணவர் செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, 5 பவுன் தங்க நகையை வரதட்சணையாக தர வேண்டும் என்றும், இல்லையெனில் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால், மிகுந்த மன வேதனை அடைந்த எனது மகள் பிரியங்கா வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். எனவே, எனது மகளின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். திருமணமான 3 மாதத்தில் வரதட்சனை கொடுமையால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால் விழுப்புரம் ஆர்டிஓ அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவி மையம் : 104,
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)
மேலும் படிக்க: நாய் கடிக்கு ஆளான சிறுவன்..பெற்றோரிடம் மறைத்ததால் விபரீதம்…3 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்!