வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற காட்டு யானை.. நள்ளிரவில் அலறல் சத்தம்.. கோவையில் “திக்.. திக்”.. சம்பவம்!
Coimbatore Wild Elephant : கோயம்புத்தூர் மாவட்டத்தில் காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததுடன், வீட்டி ன் காம்பவுண்ட் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்ற சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது .
கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக அடர்ந்த காட்டுப் பகுதியை விட்டு வெளியேறி வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு அடர்ந்து வனப் பகுதிக்குள் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறி கதிர் நாயக்கன்பாளையம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அந்த யானை சாலையின் வழியாக ஆடி அசைந்தவாறு சென்ற காட்சிகள் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.
வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற யானை
மேலும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரில் பொருத்தப்பட்டிருந்த கதவை தனது துதிக்கையால் முட்டி திறந்தது. தொடர்ந்து, வீட்டின் வளாகத்துக்குள் அந்த காட்டு யானை நுழைய முடிந்தது. அப்போது, கதவு உடைக்கும் சத்தம் கேட்ட அந்த வீட்டினர் எட்டிப் பார்த்தபோது வீட்டின் வாயிலில் காட்டு யானை இருந்தது தெரிய வந்தது. உடனே, அவர்கள் சத்தம் போட்ட நிலையில், அந்த யானை உள்ளே வராமல் வீட்டின் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வாழை மரத்தை வேருடன் பிடுங்கி அதன் இலைகளை சாப்பிட்டது.
மேலும் படிக்க: 27 வழக்குகள்… 6 கொலைகள்.. தூத்துக்குடி துப்பாக்கி செல்வம் கொடூர கொலை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மர்ம கும்பல்!
சமூகவலைதளங்களில் சிசிடிவி காட்சிகள் வைரல்
மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த மரம், செடி, கொடிகளை சேதப்படுத்தியது. பின்னர், அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றது. இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததும், வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றதும் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்
குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி உலா வரும் இந்த காட்டு யானையை வனத்துறையினர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டி விட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன், இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரேனும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, கோவையில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திருவள்ளூரில் கொடூரம்.. ஆந்திர பெண் கழுத்து நெறித்து கொலை.. முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் அழிக்க முயற்சி!