வாட்ஸ்அப்பில் வந்த வீடியோ கால்.. முதியவரிடம் ரூ.60 லட்சம் அபேஸ்.. சிக்கிய தம்பதி.. சென்னையில் ஷாக்!!
Digital arrest scam: இதனால், சட்டச் சிக்கலுக்கு அஞ்சிய வைரவன், சுமார் ரூ.60.70 லட்சத்தை அவர்கள் குறிப்பிட்ட கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், சொன்னபடி பணம் திரும்ப வராத நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் ஆவடி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
சென்னை, பிப்ரவரி 21: சென்னையில் முதியவர் ஒருவரை டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ரூ.60 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே அளவு ஆபத்துகளையும் சுமந்து வருகிறது. குறிப்பாக, சமீபகாலமாகப் பெருகி வரும் ‘டிஜிட்டல் கைது’ (Digital Arrest) எனும் புதிய வகை மோசடிக்கு அப்பாவி மக்கள் சிக்கி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் பலமுறை எச்சரித்தும், பலரும் இந்த மோசடியில் சிக்குகின்றனர்.
இதையும் படிக்க: வீடு தேடி வந்த விபரீதம்.. வாடகைக்கு குடியேறிய போலி மருத்துவர் நூதன மோசடி.. நகை, பணத்தை இழந்த குடும்பம்..
வாட்ஸ் மூலம் வந்த வீடியோ கால்:
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள பாடி பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் வைரவன். இவருக்கு வாட்ஸ்-அப் மூலம் ஒரு வீடியோ அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள், தங்களை ‘மும்பை சைபர் கிரைம் போலீஸ்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். முதியவரின் வங்கி கணக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், அதனைச் சரிபார்க்க அவர் வசம் உள்ள மொத்தப் பணத்தையும் தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
ரூ.60.70 லட்சம் அபேஸ்:
அதோடு, விசாரணை முடிந்ததும் அந்த பணத்தை மீண்டும் தங்களது வங்கிக் கணக்கிற்கு திருப்பி செலுத்தப்படும் என நம்பிக்கை அளித்துள்ளனர். மேலும், பணத்தை செலுத்த தவறினால் ‘டிஜிட்டல் கைது’ செய்ய நேரிடும் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால், சட்டச் சிக்கலுக்கு அஞ்சிய வைரவன், சுமார் ரூ.60.70 லட்சத்தை அவர்கள் குறிப்பிட்ட கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், சொன்னபடி பணம் திரும்ப வராத நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் ஆவடி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
மோசடி தம்பதி சிக்கியது எப்படி?
இந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (46) மற்றும் நர்சிங் துறையில் பணியாற்றும் அவரது மனைவி சுசீலா (40) ஆகியோரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இவர்களது செயல்பாடுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தன.
கல்லூரி மாணவர்கள் டார்கெட்:
கல்லூரி மாணவர்கள் மற்றும் படிப்பறிவில்லாத எளிய மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்குக் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அந்த நபர்களின் பெயரில் வங்கி கணக்குகளைத் தொடங்கி, அதன் ஆவணங்களை மோசடி கும்பலிடம் ஒப்படைத்து அதன் மூலம் லாபம் ஈட்டி வந்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட தம்பதியிடமிருந்து 3 செல்போன்கள், 6 வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் 7 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: குடும்பத்தையே சீர்குலைத்த புற்றுநோய்.. மனைவி மீதான அதீத பாசத்தால் விபரீத முடிவு.. தந்தை, மகன் பலி!!
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்:
எந்தவொரு காவல் துறையினரும் வீடியோ அழைப்பு மூலம் யாரையும் விசாரணை செய்யவோ அல்லது பணத்தைப் பரிமாறச் சொல்லவோ மாட்டார்கள். ‘டிஜிட்டல் கைது’ என்பது சட்டப்படி கிடையாது என்பதைப் பொதுமக்கள் உணர வேண்டும். தெரியாத எண்களில் இருந்து வரும் மிரட்டல்களுக்குப் பயப்படாமல், உடனடியாக உள்ளூர் காவல்துறையை அல்லது 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்பு கொள்வதே இத்தகைய மோசடிகளில் இருந்து தப்பிக்க ஒரே வழியாகும்.