வீடு தேடி வந்த விபரீதம்.. வாடகைக்கு குடியேறிய போலி மருத்துவர் நூதன மோசடி.. நகை, பணத்தை இழந்த குடும்பம்..
புனிதராஜின் புகாரைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. ஜெகதீஷ் உண்மையில் பிஸியோதெரப்பி எனும் டிப்ளமோ படிப்பை மட்டுமே முடித்தவர். ஆனால், தன்னை ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர் என்று பொய் கூறி பலரை ஏமாற்றி வந்துள்ளார்.
சென்னை, பிப்ரவரி 20: வாடகைக்கு வீடு எடுப்பது போல் நடித்து, வீட்டு உரிமையாளர்களிடம் நற்பெயர் எடுத்து, இறுதியில் அவர்களது நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற போலி மருத்துவர் ஒருவரைச் சென்னை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அன்பு மற்றும் மரியாதையின் பெயரால் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெற்று, பின்னர் அதையே ஆயுதமாகப் பயன்படுத்தி ஏமாற்றும் குற்றச் சம்பவங்கள் இன்று சமூகத்தில் பெருகி வருகின்றன. குறிப்பாக, கௌரவமான பதவிகளில் இருப்பவர்கள் என்ற போர்வையில் அறிமுகமாகும் நபர்கள், சாதாரண மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி நூதன முறையில் கொள்ளையடிப்பது பெரும் கவலையை அளிக்கிறது. அப்படி, நடந்த இந்தச் சம்பவம் குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க: பகலில் IT வேலை, சொகுசு வாழ்க்கை.. இரவில் வீடு வீடாக திருட்டு.. போலீசாருக்கு தண்ணி காட்டிய பலே கில்லாடி!!
வாடகைக்கு குடிவந்த போலி டாக்டர்:
திருவண்ணாமலையைச் சேர்ந்த புனிதராஜ் (22) என்பவர் சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ஜெகதீஷ் (52) என்பவர் புனிதராஜின் வீட்டின் கீழ்த்தளத்தில் தனது குடும்பத்துடன் வாடகைக்குக் குடிவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தன்னை ஒரு ‘டாக்டர்’ என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஜெகதீஷ், புனிதராஜின் குடும்பத்தாரிடம் மிகுந்த அன்புடனும், நெருக்கமாகவும் பழகி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து, சென்னையில் தந்தையர் தின விழா சிறப்பாக நடைபெற உள்ளதாகக் கூறி புனிதராஜின் குடும்பத்தை ஜெகதீஷ் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
நூதன முறையில் அரங்கேறிய கொள்ளை:
அப்போது, ராயப்பேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குச் சென்றபோது, அவர்களுக்குப் புத்தாடை வாங்கித் தருவதாகக் கூறி கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, புதிய உடைகளை அணிந்து பார்க்க புனிதராஜின் குடும்பத்தினர் ‘டிரையல் ரூம்’ சென்றபோது, அவர்கள் தங்களது கைப்பையை ஜெகதீஷிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் வெளியே வந்து பார்த்தபோது ஜெகதீஷும் அவரது மகளும் மாயமாகியிருந்தனர். அந்தப் பையில் இருந்த 16 பவுன் தங்க நகைகள், 2 செல்போன்கள் மற்றும் ரொக்கப்பணத்துடன் ஜெகதீஷ் தப்பியோடிவிட்டது தெரியவந்தது.
விசாரணையில் அம்பலமான உண்மைகள்:
புனிதராஜின் புகாரைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. ஜெகதீஷ் உண்மையில் பிஸியோதெரப்பி எனும் டிப்ளமோ படிப்பை மட்டுமே முடித்தவர். ஆனால், தன்னை ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர் என்று பொய் கூறி பலரை ஏமாற்றி வந்துள்ளார். அதோடு, இந்த திருட்டு சம்பவம், இவருக்கு முதல் முறை அல்ல; பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து, உரிமையாளர்களிடம் நம்பிக்கையைப் பெற்று அவர்களின் உடைமகளை அபகரிப்பதையே ஒரு தொழிலாகக் கொண்டுள்ளார்.சென்னை சாஸ்திரி நகர் மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர் மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையும் படிக்க: குடும்பத்தையே சீர்குலைத்த புற்றுநோய்.. மனைவி மீதான அதீத பாசத்தால் விபரீத முடிவு.. தந்தை, மகன் பலி!!
திருட்டு பணத்தில் சொகுசு வாழ்க்கை:
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் தலைமறைவாக இருந்த ஜெகதீஷ், சென்னை கொளத்தூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ரகசியமாகத் தங்கி வந்துள்ளார். போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் பிடிபட்டார். கோவை சிங்கநல்லூரைச் சேர்ந்த இவர், மக்களின் நம்பிக்கையைச் சிதைத்துக் கொள்ளையடித்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெகதீஷ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.