உரசும் விசிக.. நெருங்கும் பாமக.. தவெக கூட்டணியின் அதிரடி நகர்வுகள்.. அடுத்தடுத்த ட்விஸ்ட்!!
தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகள் தற்பொழுது அரங்கேறி வருகின்றன. பாமக தவெக-வை நோக்கித் தனது அரசியல் காய்களை நகர்த்தி வரும் சூழலில், திமுக மற்றும் தவெக ஆகிய இரு துருவங்களுக்கு இடையே விசிக எடுத்துள்ள நிலைப்பாடு கட்சிக்குள்ளும், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதன் முழுப் பின்னணி இந்தத் தொகுப்பில்
சென்னை, ஜூலை 08: தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய தற்போதைய அரசியல் சூழலில், கூட்டணிக் கணக்குகளும் கட்சிகளுக்கு இடையேயான நகர்வுகளும் நாளுக்கு நாள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தற்போதைய நகர்வுகளும், அதையொட்டி பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகியவை எடுக்கும் முடிவுகளும் தமிழக அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படும் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளன.
இதையும் படிக்க: “திமுகவுடன் நட்பு தொடர்கிறது.. ஆனால்”.. பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!!
தவெக-வை நோக்கி நகரும் பாமக: பின்னணி என்ன?
சமீப நாட்களாக பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் ஒரு சுமுகமான மற்றும் நெருக்கமான உறவை வளர்த்து வருவதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தவெக அரசு ‘சமூகநீதி கணக்காய்வு’ நடத்தப்படும் என்று அறிவித்த போதே, பாமக அதனை உடனடியாக வரவேற்றுத் தனது ஆதரவை வெளிப்படுத்தியது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தவெக தலைவர்கள் இடையே அண்மையில் நிகழ்ந்த சந்திப்புகளும், அவர்கள் பரஸ்பரம் பாராட்டி வரும் நட்புறவும் இந்த நெருக்கத்தை உறுதிப்படுத்துகின்றன.
இதற்குப் பின்னால் வலுவான அரசியல் மற்றும் தேர்தல் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து பாமக தேர்தலைச் சந்தித்தது. இந்த கூட்டணியால் வட மாவட்டங்களில் அதிமுக-விற்கு கணிசமான இடங்கள் கிடைத்து லாபம் விளைந்ததே தவிர, பாமக எதிர்பார்த்த அளவிற்குப் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை.
தற்போதைய சூழலில், கட்சியில் இருந்த உள்விகாரக் குழப்பங்கள் நீங்கி ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் இணைந்து கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தவெக-விடம் தற்பொழுது இருக்கும் வாக்கு வங்கியும், அதன் அரசியல் பலமும் பாமகவை இயல்பாகவே அந்த அணியை நோக்கி ஈர்த்து வருகிறது. மேலும் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் விசிக-வை விட கூடுதல் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள பாமக, தங்களின் நிரந்தர அரசியல் லாபத்தை நோக்கியே இந்த காய்நகர்த்தலை மேற்கொள்கிறது.
பாதுகாப்பான ஆட்டத்தில் விசிக:
மறுபுறம், தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய தட்டையான கூட்டணிச் சூழலில் விசிக இல்லை என்பதை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவ்வப்போது பேசி வருகிறார். தவெக-வுடனான தற்போதைய உறவு என்பது ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்ற தார்மீக ஆதரவு நிலை மட்டுமே என்றும், தேவைப்பட்டால் இந்த ஆதரவை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருமாவளவனின் இந்த இரட்டை நிலைப்பாட்டிற்குப் பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஓன்று, பாஜக அல்லது பாமக இடம்பெறும் எந்தவொரு கூட்டணியிலும் விசிக இணையாது என்பதில் திருமாவளவன் நீண்டகாலமாக உறுதியாக இருக்கிறார். தற்போது பாமக தவெக-வை நோக்கி நகர்வதால், விசிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது.
இரண்டாவது, விசிக-வின் முக்கிய தலைவர்களான ஆலூர் ஷாநவாஸ் போன்றவர்கள், கட்சி முழுமையாக தவெக பக்கம் நகர்வதை தற்போதைக்கு விரும்பவில்லை என்ற ஐயப்பாடு நிலவுகிறது. அதேநேரம் பனையூர் பாபு போன்ற நிர்வாகிகள் தவெக பக்கம் இடம்பெயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை தற்போதே கூட்டணியை உறுதி செய்து அறிவித்தால், அது கட்சிக்குள் உள்விவகாரச் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என அவர் கருதலாம்.
இத்தகைய சூழலில், தவெக பக்கமும் முழுமையாகச் செல்லாமல், அதே சமயம் திமுக கூட்டணியையும் முற்றாகப் புறந்தள்ளாமல் திருமாவளவன் இரு தரப்பிலும் ஒரு பாதுகாப்பான அரசியல் ஆட்டத்தை ஆடி வருகிறார்.
அழுத்தம் கொடுக்கும் காங்கிரஸ் மற்றும் மதிமுக:
கூட்டணியில் இருந்து கொண்டே திருமாவளவன் தவெக குறித்தும், ஆட்சிப் பங்கு குறித்தும் பொதுவெளியில் தொடர்ந்து பேசி வருவது தற்போதைய திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விசிக-வின் இந்த நகர்வுகளுக்கு மதிமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பகிரங்கமாகவே தங்களின் அழுத்தங்களைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளன.
இதையும் படிக்க : முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை கோரிய வழக்கு.. கொந்தளித்த உச்சநீதிமன்றம்.. நடந்தது என்ன?
கூட்டணியில் இருந்து கொண்டே பொதுவெளியில் இது போன்ற மாற்று அரசியல் கருத்துக்களைப் பேசாதீர்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர், “ஆட்சி உறவு வேறு, கூட்டணி உறவு வேறு அல்ல; இரண்டும் ஒன்றுதான்” என்று விசிக-வின் வாதத்தை மறுத்துள்ளார்.