முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை கோரிய வழக்கு.. கொந்தளித்த உச்சநீதிமன்றம்.. நடந்தது என்ன?
நீங்கள் ஒருவரை அரசியல் எதிரியாகக் கருதலாம்; அதற்காக நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியாது" என்று சுட்டிக்காட்டினர். "பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு சார்பில் கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் அல்லது உதவிகள் வழங்கினால், அது இந்த வழக்கை எந்த வகையில் பாதிக்கும்?" என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
டெல்லி, ஜூலை 07: கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கும், அரசு உதவிகளை வழங்குவதற்கும் தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், நீதிமன்றத்தை அரசியல் சண்டைகளுக்கான மேடையாக மாற்ற வேண்டாம் என திமுக வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: “எம்எல்ஏக்களை விலை பேசுவது வெட்கக்கேடானது!”.. குதிரை பேரம் விவகாரத்தில் செங்கோட்டையன் ஆவேசம்!
வழக்கும் திமுகவின் வாதமும்:
கரூர் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய்யோ அல்லது அவரது அமைச்சர்களோ பொதுவெளியில் எந்தவொரு கருத்தும் கூறக்கூடாது, அவர்களின் பேச்சுரிமைக்குத் தடை விதிக்க வேண்டும் மற்றும் முதலமைச்சர் விஜய் கரூருக்குப் பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், திமுக தரப்பு வழக்கறிஞர்களை நோக்கிப் பல்வேறு அதிரடிக் கேள்விகளை எழுப்பினர்:
எஃப்.ஐ.ஆரில் பெயர் இல்லையே?:
முந்தைய திமுக ஆட்சி காலத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலேயே (FIR) தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் பெயர் இடம்பெறவில்லை. அப்படி இருக்கும்போது, இந்த சம்பவத்தில் அவரை எப்படிக் குற்றம் சாட்டப்பட்ட நபராகக் குறிப்பிட்டு மனு தாக்கல் செய்தீர்கள்? ஆவணங்களைப் படிக்காமலேயே வாதாடுகிறீர்களா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஒரு முதலமைச்சரின் பேச்சு மற்றும் அவரது நிர்வாக நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் பேச்சுரிமைக்குத் தடை விதிக்க முயல்கிறீர்களா?” என நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டனர்.
அரசியல் எதிரி என்பதால் உத்தரவிட முடியுமா?:
அரசியல் எதிரிகளுடைய கருத்துக்களுக்கு நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? நீங்கள் ஒருவரை அரசியல் எதிரியாகக் கருதலாம்; அதற்காக நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியாது” என்று சுட்டிக்காட்டினர். “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு சார்பில் கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் அல்லது உதவிகள் வழங்கினால், அது இந்த வழக்கை எந்த வகையில் பாதிக்கும்?” என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:
திமுக தாக்கல் செய்த மனுவில் முழுமையான மற்றும் முறையான சட்டப்பூர்வ தகவல்கள் இல்லை என்றும், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்தைத் தொடர்ந்து, மனுவைத் தள்ளுபடி செய்ய நீதிபதிகள் முற்பட்டனர். இதனால் நிலையை உணர்ந்த திமுக வழக்கறிஞர்கள், வேறு சட்ட வழிமுறைகள் மூலம் இந்த விவகாரத்தை அணுக அனுமதி பெற்று, தங்களது மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மனுவைத் திரும்பப் பெற்றதாகக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிக்க: “திமுகவுடன் நட்பு தொடர்கிறது.. ஆனால்”.. பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!!
பயணத்தில் சிக்கல் இல்லை:
உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, வரும் 10-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திட்டமிட்டபடி கரூருக்குப் பயணம் மேற்கொள்வதில் எந்தவிதச் சட்டச் சிக்கலும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி நியமனங்கள் அல்லது இதர நிதியுதவிகளை முதலமைச்சர் வழங்கினாலும் அதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதும் இந்த வழக்கின் மூலம் தெளிவாகியுள்ளது.