AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கரூர் சம்பவம்.. திமுகவின் அதிரடி மூவ்.. நாளையே உச்சநீதிமன்றத்தில் அவசர விசாரணை!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய முதன்மை அமர்வில், ஆர்.எஸ். பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அகமது இன்று காலை அவசர முறையீடு செய்தார். வழக்கின் தீவிரத்தன்மையையும், 41 உயிர்கள் பலியான விவகாரத்தையும் கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், திமுக தரப்பின் இந்த அவசர முறையீட்டை உடனடியாக ஏற்றுக்கொண்டது.

கரூர் சம்பவம்.. திமுகவின் அதிரடி மூவ்.. நாளையே உச்சநீதிமன்றத்தில் அவசர விசாரணை!
உச்சநீதிமன்றம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 06 Jul 2026 11:49 AM IST

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக அரசியல் களம் தற்பொழுது உச்ச நீதிமன்றத்திற்கு நகர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் தவெக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் திமுக தாக்கல் செய்துள்ள அவசர இடையீட்டு மனுவை, நாளை அவசர வழக்காக எடுத்து விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. இந்த வழக்கின் முழு பின்னணி மற்றும் திமுக முன்வைத்துள்ள அதிரடி கோரிக்கைகள் குறித்தும் இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க : வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!

நாட்டையே உலுக்கிய கரூர் சம்பவப் பின்னணி:

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள் உட்பட சுமார் 41 பேர் பரிதாபமாகப் பலியாகினர்; நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சிகளும் தவெகவின் தேர்தல் நிர்வாகக் குளறுபடிகளே இதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டின. எதிர்க்கட்சிகளின் தொடர் சட்டப் போராட்டத்தை அடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்பொழுது இந்த வழக்கை சிபிஐ (CBI) தன் கையில் எடுத்து தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகிறது.

திமுகவின் இடையீட்டு மனுவும், ஆவேசக் குற்றச்சாட்டுகளும்:

சிபிஐ விசாரணை ஒருபுறம் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கும் சூழலில், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூர் துயரச் சம்பவம் குறித்து அண்மையில் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதனைச் சுட்டிக்காட்டி, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு முக்கிய இடையீட்டு மனு அவசரமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் திமுக தரப்பு முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் என்னவென்றால், 41 பேர் பலியான வழக்கில் சிபிஐ விசாரணை தற்போது நிலுவையில் உள்ளதால், தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் ஆதாயன்டி நிர்மல்குமார் உள்ளிட்ட தவெக தரப்பில் உள்ள முக்கியப் பொறுப்பாளர்கள் யாரும் இந்த வழக்கு குறித்துப் பொதுவெளியில் பேசக்கூடாது.

முக்கியமாக, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் வகையிலோ அல்லது சுதந்திரமான சிபிஐ விசாரணையைப் பாதிக்கும் வகையிலோ எந்தவொரு கருத்துகளையும் தெரிவிக்க நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்.

சாட்சிகள் பாதுகாப்பு மற்றும் நிவாரணம்:

கூட்ட நெரிசலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி மற்றும் இதர நலத்திட்டங்களை வழங்க மாநில அரசுக்கு முழு உரிமை உள்ளது. இருப்பினும், சிபிஐ விசாரணையின் நேர்மைத் தன்மையைக் கருத்தில் கொண்டும், இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளின் பாதுகாப்புக்கு எவ்வித பங்கமும் நேராத வண்ணமும், நீதிமன்றத்தின் கடுமையான வழிகாட்டுதலின் படியே வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள முதலமைச்சரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அமைய வேண்டும்.

நாளை அவசர விசாரணைக்கு வருகிறது:

இந்த இடையீட்டு மனுவை மிகவும் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய முதன்மை அமர்வில், ஆர்.எஸ். பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அகமது இன்று காலை அவசர முறையீடு செய்தார். வழக்கின் தீவிரத்தன்மையையும், 41 உயிர்கள் பலியான விவகாரத்தையும் கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், திமுக தரப்பின் இந்த அவசர முறையீட்டை உடனடியாக ஏற்றுக்கொண்டது. மேலும், இந்த மனுவை நாளையே (ஜூலை 7) அவசர வழக்காகப் பட்டியலிட்டு விசாரிப்பதாக நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: தவெகவில் இணைந்த திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் – தமிழக அரசியலில் பரபரப்பு

தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 50 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில், திமுக நீதிமன்றம் வாயிலாகத் தொடுத்துள்ள இந்த அடுத்தடுத்த சட்டப் போராட்டங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பையும், தவெக தரப்பில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us