போலீஸுக்கே இந்த நிலைமையா?.. கோவையில் காவலரையே மிரட்டிய போதை ஆசாமி.. பொதுமக்கள் பீதி!!
நிலைமை மோசமாவதைக் கண்டு பயந்த பொதுமக்கள், உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ரோந்துப் பணியில் இருந்த காவலர் இருவர் வந்துள்ளனர். அவர் அந்த வாலிபரை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறியதுடன், வீடியோ எடுத்த நபரை மிரட்டியதால் அவனது செல்போனைத் தரும்படி கேட்டுள்ளார்.
கோவை மாநகரப் பகுதியில் நள்ளிரவில் கஞ்சா போதையில் ரகளை செய்த வாலிபர் ஒருவர், தட்டிக்கேட்க வந்த ரோந்துப் பணி காவலரையே நடுரோட்டில் ஆபாசமாகத் திட்டி, மிரட்டி அனுப்பிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுக்க போலீஸார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகப் புறநகர்ப் பகுதியில் போலீஸ் பிடி இறுகியதால், போதை ஆசாமிகள் பலர் தற்போது கோவை மாநகரப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மாநகரப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளின் அருகே மறைமுகமாகக் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் படிக்க: கோவையில் காதலி விவகாரத்தில் புகைப்பட கலைஞர் கொலை.. உடலை தண்டவாளத்தில் வீசிய கொடூரம்.. இருவர் அதிரடி கைது!
நள்ளிரவில் சட்ட விரோதக் கடைகள்:
கோவை, சவுரிபாளையம் பிரிவில் இருந்து உடையாம்பாளையம் செல்லும் சாலையில், நள்ளிரவு 12:30 மணிக்கும் மேலாகச் சிகரெட், வாட்டர் பாட்டில் மற்றும் ஸ்நாக்ஸ் கடைகள் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வருகின்றன. இதனால், இப்பகுதியில் நள்ளிரவில் போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்து, அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட அஞ்சி நடுங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
செல்போன் வீடியோவால் வெடித்த ரகளை:
நேற்று நள்ளிரவு சவுரிபாளையம் பிரிவு பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சா போதையில் நிற்கக்கூட முடியாமல் தள்ளாடியபடி, பொதுமக்களைப் பார்த்து ஆபாச வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தி வந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி நபர் ஒருவர், தனது செல்போனில் அதனை வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் போதை ஆசாமி, வீடியோ எடுத்தவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
காவலருக்குக் கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி:
நிலைமை மோசமாவதைக் கண்டு பயந்த பொதுமக்கள், உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ரோந்துப் பணியில் இருந்த காவலர் இருவர் வந்துள்ளனர். அவர் அந்த வாலிபரை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறியதுடன், வீடியோ எடுத்த நபரை மிரட்டியதால் அவனது செல்போனைத் தரும்படி கேட்டுள்ளார்.
இதில் உச்சக்கட்ட ஆத்திரமடைந்த அந்தப் போதை ஆசாமி, காவலர் என்றும் பாராமல் ஆபாசமாகத் திட்டியதோடு, “எதுக்கு என் போனை கேக்குற? நான் தப்பு பண்ணல… என் மேல ஒரு வார்த்தை தப்பா சொல்ல முடியாது! என்னை எவ்வளவு வேணாலும் அடிச்சுக்கோ… என் மேல தப்பு இல்ல. நாளைக்குக் காலையில உன்னை பாத்துக்கலாம்… சத்தியமா பாப்போம், கண்டிப்பாகப் பார்ப்போம்!” என்று காவலரையே நடுரோட்டில் வைத்து மிரட்டி, அதிரடி அளப்பறையில் ஈடுபட்டான்.
பின்னோக்கிச் சென்ற காவலர்கள்; பொதுமக்கள் அச்சம்:
கஞ்சா போதையில் இருந்த அந்த வாலிபரிடம் நீண்ட நேரம் போராடிப் பார்த்த காவலர், அவன் கட்டுப்பாடின்றி மிரட்டியதால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல், அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டனர். பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினரையே போதை ஆசாமி மிரட்டி அனுப்பியதைக் கண்டு, அங்கிருந்த பொதுமக்கள் உறைந்து போயினர்.
மேலும் படிக்க: ஆடு திருடிய வழக்கறிஞருக்கு அரசுப் பதவி வழங்கியது நியாயமா முதல்வரே? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!
“காவல்துறைக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களாகிய நாங்கள் யாரிடம் போய் புகார் கூறுவது? எங்கள் உயிருக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?” என்று சவுரிபாளையம் பகுதி பொதுமக்கள் தற்பொழுது கடுமையான அச்சத்துடன் புலம்பி வருகின்றனர். இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.