Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசு பணி வாங்கி தருவதாக வாக்குறுதி.. ரூ.8 லட்சத்தை அபகரித்த கில்லாடி பெண்கள்.. போலீசார் போட்ட காப்பு!

Tirunelveli Crime: திருநெல்வேலி மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் ரூ. 8 லட்சத்தை அபகரித்த இரு கில்லாடி பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பணி வாங்கி தருவதாக வாக்குறுதி.. ரூ.8 லட்சத்தை அபகரித்த கில்லாடி பெண்கள்.. போலீசார் போட்ட காப்பு!
அரசு பணி வாங்கி தருவதாக மோசடி செய்த இரு பெண் கைது
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 14 Feb 2026 09:53 AM IST

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் அஜித் குமார். இவருக்கும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜலட்சுமி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜினி ஆகியோருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சரோஜினி சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாகவும், இவர் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் இருவரும் அஜித் குமாரிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய அஜித்குமார் தனக்கும் சுகாதார ஆய்வாளர் பணியை வாங்கி தருமாறு கூறியுள்ளார். அதற்கு, ராஜலட்சுமி மற்றும் சரோஜினி ஆகியோர் பணம் செலவாகும் என்று கூறியதாக தெரிகிறது. அதன்படி, அஜித்குமாரிடம் இருந்து பல்வேறு தவணைகளாக ரூ.8 லட்சம் வரை பணத்தை பெற்றுள்ளனர். ஆனால், வெகு நாட்கள் ஆகியும் அரசு பணியை வாங்கி தராமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அஜித்குமார் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

போலி பணி ஆணையை கொடுத்த பெண்கள்

அதற்கு, விரைவில் அரசு பணி கிடைத்து விடும் எனவும், அதற்கான பணி ஆணையை விரைவில் பெற்று தருவதாகவும் கூறியுள்ளனர். அதன்படி, சில நாட்கள் கழித்து பணி ஆணையை அஜித்குமாருக்கு சரோஜினி மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் வழங்கியுள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட அஜித் குமார், அந்த பணி ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்த அரசு அலுவலகத்திற்கு நேரில் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பணி ஆணையை பார்த்த உயர் அதிகாரி இந்த அலுவலகத்தில் எந்த சுகாதார ஆய்வாளரும் நியமிக்கப்படவில்லை எனவும், இது போலியான பணி ஆணை எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தொண்டையில் சிக்கிய ஆப்பிள் துண்டு.. உயிருக்கு போராடிய 9 மாத குழந்தை..

எஸ்.பி.யிடம் புகார் அளித்த இளைஞர்

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அஜித் குமார், அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர், இதுகுறித்து, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். அதன்படி, குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கில்லாடி பெண்களை கைது செய்த போலீசார்

இந்த விசாரணையில், அஜித்குமாரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சத்தை ராஜ லட்சுமி மற்றும் சரோஜினி ஆகியோர் மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அரசு பணி வாங்கித் தருவதாக பல்வேறு மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான போதிய விழிப்புணர்வுகள் இருந்தும் மக்கள் பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

மேலும் படிக்க: சிவாலய ஓட்டம்… கன்னியாகுமரி மாவட்டத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு… முன்னேற்பாடுகள் தீவிரம்!