கணவர் வீட்டார் டார்ச்சர்? உறவினர் சமரச முயற்சி.. 7 மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு!
Nagapattinam Crime: நாகப்பட்டிணம் மாவட்டத்தில் கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் 7 மாதமே ஆன கர்ப்பிணி பெண் விபரீதமான முடிவை எடுத்துள்ளார். இதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார், கோட்டாட்சியர் விசாரித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி, அனந்தநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் குமரவேல். இவரது மனைவி திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்த்த சக்தி பிரியா (29 வயது). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சக்தி பிரியா 7 மாதம் கர்ப்பிணியாக இருந்து வந்தார். இதனிடையே, குமரவேலுக்கும், சக்தி பிரியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இருவரும் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், சக்தி பிரியா தனது கணவர் குமரவேலுடன் கோபித்துக் கொண்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று அங்கேயே வசித்து வந்துள்ளார்.
7 மாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
இந்த நிலையில், உறவினர்கள் சக்தி பிரியாவிடம் சமாதானம் பேசியதுடன், அவரை மீண்டும் கணவர் குமரவேலுவின் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. அப்போது, சக்தி பிரியா தனது கணவர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே, சக்தி பிரியாவுக்கு கடந்த ஜனவரி மாதம் 28- ஆம் தேதி மன்னார்குடியில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில், குமரவேலுவின் பெற்றோருக்கும், சக்தி பிரியாவிற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா – விருதுகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்




தற்கொலை முடிவில் இறங்கிய கர்ப்பிணி
இதில், சக்தி பிரியா மனம் உடைந்து வருத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால், ஒரு கட்டத்தில் சக்தி பிரியா தற்கொலை முடிவை கையில் எடுத்துள்ளார். அதன்படி, அவர் கணவர் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். உடனே, வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, சக்தி பிரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி
அதன்படி, சக்தி பிரியாவை அவரது உறவினர்கள் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் சக்தி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சக்தி பிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஒரே ஆண்டில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்கொலை எண்ணத்தை தவிர்க்க
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)
மேலும் படிக்க: உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அதிகாலையில் கொட்டும் பனி.. இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?