மகா சிவராத்திரி…சென்னையில் இருந்து இந்த 2 ஊர்களுக்கு கூடுதல் ரயில்கள் அறிவிப்பு!
Maha Shivaratri Special Trains: மகா சிவராத்திரியையொட்டி, சென்னையில் இருந்து நாளை ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று பிற்பகல் தொங்குகிறது. இதே போல, மறுமார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) மாலை 5 மணி முதல் மறுநாள் திங்கள்கிழமை ( பிப்ரவரி 16) மாலை 5:34 வரை சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வின் போது, கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவை நடைபெறும். இதே போல, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கமாகு. இதனால், ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக செல்வது வழக்கமாகும். அவர்கள் அங்கு கிரிவலப் பாதையில் சுற்றி வருவார்கள். இவ்வாறு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10:15 மணிக்கு சிறப்பு ரயில் ( வண்டி எண்:0107) புறப்பட்டு, அதே நாள் மதியம் 3 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று சனிக்கிழமை ( பிப்ரவரி 14) மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.
சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது
இதே போல, மறு மார்க்கத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதி (திங்கள்கிழமை) திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் ( வண்டி எண்: 06108) இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது, அன்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாள் காலை 9:15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்து சேரும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று சனிக்கிழமை ( பிப்ரவரி 14) மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.
மேலும் படிக்க: Maha Shivaratri : திரிசூலம் முதல் நந்தி வரை… சிவனின் சின்னங்களின் அர்த்தமும் ரகசியங்களும்!
முன் பதிவில்லாத மெமு சிறப்பு ரயில்
இதே போல, நாளை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட்க்கு முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரயில் ( வண்டி எண்:06109) இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது அன்று மதியம் 12 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாள் மாலை 6 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறுமார்க்கமாக சிறப்பு ரயில்கள் இயக்கம்
இதே போல, மறு மார்க்கமாக, பிப்ரவரி 16- ஆம் தேதி (திங்கள்கிழமை) வேலூர் கண்ட்ரோன்மெண்டில் இருந்து தாம்பரத்துக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரயில் (வண்டி எண்: 06110) இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது அன்று அதிகாலை 3 மணிக்கு வேலூரில் இருந்து புறப்பட்டு, அதே நாள் காலை 9:15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடையும். பொது மக்கள் மற்றும் பக்தர்கள் இந்த சிறப்பு ரயில்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சர்வ ஏகாதசி, விஷ்ணுபதி புண்யகாலம்.. வேண்டுதல்கள் நிறைவேற இன்றைய நாளை தவறவிடாதீர்!



