Trichy: ஜெய்பீம் பட தாக்கம்.. சட்ட நுழைவுத் தேர்வில் பழங்குடியின மாணவன் முதலிடம்!
திருச்சியைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் பரத், CLAT தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று, அம்மாவட்டத்தில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு இடம் பெற்றுள்ளார். இது தமிழகத்தின் மலைவாழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. மாணவன் பரத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

திருச்சி,ஜூன் 7: தமிழகத்தில் இருந்து தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் (Tamil Nadu National Law University) சேரும் முதல் பழங்குடியின மாணவன் என்ற பெருமையை திருச்சியைச் சேர்ந்த பரத் என்பவர் பெற்றுள்ளார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவரான பரத்தை கண்டு உள்ளம் உவகையில் நிறைகிறது. அவர் சட்டம் பயின்று தன்னுடைய அறிவொளியை இந்த சமூகத்துக்கு வழங்கிட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தம்பி பரத்தின் சட்டப்படிப்புக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறையும், அதன் செயலாளருமான என்.ஆர்.இளங்கோ அவர்களும் துணை நின்று வழிநடத்துவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதனிடையே மாணவர் பரத்துக்கு இதர அரசியல் கட்சி தலைவர்களும், இணையவாசிகளும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மாணவர் பரத் பின்னணி
உள்ளம் உவகையில் நிறைகிறது💕💕💕
தம்பி பரத் அவர்கள் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்குத் தி.மு.க. சட்டத்துறையும் – அதன் செயலாளர் @nrelango_dmk அவர்களும் துணை நின்று அவரை வழிநடத்துவார்கள்! https://t.co/cBA927UVW7
— M.K.Stalin (@mkstalin) June 7, 2025




தமிழ்நாட்டின் மத்திய மாவட்டமாக அறியப்படும் திருச்சி அருகே உள்ள பச்சை மலையில் தோனூர் என்ற மலைவாழ் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பரத் புது சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அதே சமயம் அகில இந்திய அளவில் எஸ் டி பிரிவில் 964 வது இடத்தை பிடித்துள்ளார். Common Law Admission Test எனப்படும் CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் பரத் திருச்சியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயில உள்ளார்.
ஜெய்பீம் பட தாக்கம்
இவர் clat நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சட்டம் படிக்கும் முதல் பழங்குடியின மாணவன் என்ற பெருமையை பெற்றுள்ளார். மாணவர் பாரத் நடிகர் சூர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான ஜெய் பீம் படம் பார்த்து சட்டம் படிக்க விருப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார். இவரின் அம்மா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். மக்களுக்கு சேவை செய்வதில் சட்டம் தான் முதலில் வரும் என்பதால் சட்டப்படிப்பு படிக்க விருப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பச்சைமலையில் இருக்கும் பள்ளியில் பயின்ற பரத் 12 ஆம் வகுப்பு தேர்வில் 356 மதிப்பெண் பெற்றுள்ளார்.
CLAT தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அவர் சட்ட கல்லூரிக்கு விரைவில் செல்லவுள்ளார். தான் இருக்கும் பச்சைமலையில் யாரும் சட்டப்படிப்பு படித்தது இல்லை.