School Education Department : பள்ளிகளில் செவ்வாய் கிழமைகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு.. பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
Tamil Nadu Schools Reopen June 2, 2025 | தமிழகத்தில் ஒரு மாத கால கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜுன் 2, 2025 அன்று திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்தும் மாணவர்களின் நலனை மேம்படுத்தும் வகையிலும் பள்ளிக் கல்வித்துறை சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

சென்னை, மே 30 : தமிழகத்தில் ஜூன் 2, 2025 அன்று 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. ஏற்கனவே ஜூன் 2, 2025-ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை (School Education Department) அறிவித்திருந்த நிலையில், திட்டமிட்டபடி அனறைய தினமே பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக கூறபபட்டுள்ளது. அதன்படி, பள்ளிகள் திறக்கப்பட இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளிக்கு திரும்பும் மாணவர்கள்
பொதுவாக தமிழகத்தில் மே மாதத்தில் கோடை விடுமுறை அளிக்கப்படும். மே மாதத்தில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என்பதால் முழு ஆண்டு தேர்வு முடிந்ததும் அந்த ஒரு மாதம் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். தமிழகத்தில் ஏப்ரல் 25, 2025 வரை 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்ற நிலையில், அதற்கு அடுத்த நாளில் இருந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது ஜூன் 2, 2025 அன்று கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
மே மாதத்தில் சற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தை பொருத்து பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா என அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். ஆனால், மே மாத இறுதியில் மெல்ல மெல்ல வெயிலின் தாக்கம் குறைந்த மழை பொழிய தொடங்கிய நிலையில், திட்டமிட்டபடியே ஜூன் 2, 2025 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஜூன் 2, 2025-ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
பள்ளிகள் திறப்பு குறித்த பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பில் கூறியுள்ளதாவது, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமாகவும், தாமதமின்றி வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். மதிய உணவு இடைவேளை முடிந்த பிறகு சிறார் பருவ இதழ் படிக்க வேண்டும். மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது, வார ஒரு முறை நன்நெறி வகுப்பு நடத்த வேண்டும். செவ்வாய் கிழமைகளில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.