மூடுவிழா காணும் ஆதி திராவிடர் நல விடுதிகள்…காரணம் என்ன!
Adi Dravidian Welfare Hostels Closed: தமிழகத்தில் 100 - க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் நல விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விடுதிகள் தொடர்ந்து மூடப்படுவதற்கு என்ன காரணம் என்பது தொடர்பாக இந்தப் பதிவில் பார்க்கலாம் .
தமிழகத்தில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக 1,331 சமூக நீதி விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த சமூக நீதி விடுதிகளில் சுமார் 65 ஆயிரம் மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த சமூக நீதி விடுதியானது ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருகிறது. ஆனால், சமீப காலமாக இந்த சமூக நீதி விடுதிகள் கொஞ்சம், கொஞ்சமாக மூடப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் மாணவ, மாணவிகளுக்கு சரியான உணவு, போதிய வசதிகள் உள்ளிட்டவை முறையாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த விடுதிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இந்த விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட 98 ஆயிரம் மாணவர்களில் தற்போது 65 ஆயிரம் பேர் மட்டுமே தங்கி உள்ளனர்.
65 ஆயிரமாக குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை
கடந்த அதிமுக ஆட்சியில் மாணவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில் 65 ஆயிரம் ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் சேர்க்கை இல்லாத விடுதிகள் மற்றும் குறைந்த மாணவர்கள் உள்ள விடுதிகள் ஆகியவை மூடப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 51 சமூக நீதி விடுதிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது, இந்த விடுதிகளின் எண்ணிக்கை 100- ஐ தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: வீடு இல்லாதவர்களுக்கு மெரினா கடற்கரையில் இரவு நேர காப்பகம்.. விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!
நலத் திட்டங்களில் அதிகாரிகள் ஊழல்
இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சங்கரசபாபதி கூறுகையில், ஆதிதிராவிடர் நல விடுதிகள் தொடங்கப்பட்ட நோக்கத்தை மறந்து, முடி திருத்தும் கூலி, உணவு படி என அனைத்து நலத் திட்டங்களிலும் அதிகாரிகள் ஊழல் செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
விடுதிகளை மூடும் நோக்கத்தில் அதிகாரிகள்
இதில், மாணவர்கள் இல்லாத விடுதிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பதே அதிகாரிகளின் கடமையாகும். ஆனால், இதற்கு மாறாக சமூக நீதி விடுதிகளை மூடும் நோக்கத்தில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ஊரக வளர்ச்சித் துறை ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: 1,200 சமூக நீதி விடுதிகள் மட்டுமே செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மிகவும் கண்டனத்துக்குரியதாகும். இதே நிலை நீடித்தால் எதிர்க் காலத்தில் சமூக நீதி விடுதிகள் இல்லா நிலைமை ஏற்படும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் குறையும் வெப்பநிலை.. அதிகரிக்கும் பனிப்பொழிவு.. வரும் நாட்களில் எப்படி இருக்கும்?



