ஐஐடியில் படிக்கப்போகும் முதல் பழங்குடியின மாணவி.. குவியும் பாராட்டு!
கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி, JEE தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்று ஐஐடியில் இடம் பெற்றுள்ளார். வறுமை, இடப்பெயர்வு போன்ற சவால்களை எதிர்கொண்டு சாதனை படைத்துள்ள இவருக்கு அரசும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவரது படிப்பு செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

சேலம், ஜூன் 5: கல்வராயன் மலைப்பகுதியில் (Kalrayan Hills) வசித்து வரும் பழங்குடியின மாணவி ஐஐடியில் (IIT Institude) உயர்கல்வி பயில செல்லவுள்ள நிலையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் கள்ளக்குறிச்சிக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் கல்வராயன் மலையில் கருமந்துறை என்ற இடம் உள்ளது. இங்கு வசித்து வரும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர் ஆண்டி. இவர் கடந்தாண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அங்கு அவரது மனைவி கவிதா கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஜெகதீஸ்வரி ராஜேஸ்வரி பரமேஸ்வரி என்ற 3 மகள்களும், ஸ்ரீ கணேஷ் என்ற மகனும் உள்ளனர். கவிதா தன்னுடைய குழந்தைகள் 4 பேரையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறார்.
ஐஐடியில் படிக்க செல்லும் ராஜேஸ்வரி
இப்படியான நிலையில் மூன்றாவது மகளான ராஜேஸ்வரி பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 438 மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 521 மதிப்பெண்களும் பெற்றிருந்தார். வறுமை மற்றும் இடப்பெயர்வு காரணமாக அங்குள்ள பழங்குடியின மக்கள் பெரும்பாலும் 8ஆம் வகுப்பு வரையே படிக்கின்றனர். இப்படியான நிலையில் கவிதாவின் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கினர். இதில் மாணவி ராஜேஸ்வரி பொறியியல் பட்டப்படிப்பு படிக்க விரும்பிய நிலையில் பெருந்துறையில் உள்ள அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து JEE நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில் இதுதொடர்பான நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் பழங்குடியினருக்கான பிரிவில் 417 வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார் அவருக்கு தற்போது ஐஐடியில் படிப்பதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. ராஜேஸ்வரிக்கு சென்னை ஐஐடியில் படிக்க இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வராயன் மலையில் இருந்து பள்ளிக்கல்வி படித்து ஐஐடியில் படிக்க தகுதி பெற்றுள்ள முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார் இவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
முதலமைச்சர் பாராட்டு
தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் #Salute!
அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான்… https://t.co/iDSxYfUJWU
— M.K.Stalin (@mkstalin) June 5, 2025
இப்படியான நிலையில் மாணவி ராஜேஸ்வரியை முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்தியுள்ளனர். முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “தந்தையை இழந்தாலும், அவர் கண்ட கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட்!. அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடிக்கு உண்மையான பெருமையாக அமையும்! அதற்காக நமது #DravidianModel அரசு தொடர்ந்து உழைக்கும்” என கூறியுள்ளார்.
இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்த செல்வி. ராஜேஸ்வரி JEE தேர்வில் இந்திய அளவில் 417வது இடத்தையும் பிடித்து, ஐஐடியில் படிக்க இடம் கிடைத்துள்ள செய்தி கேட்டு மகிழ்வுற்றேன். மாணவி ராஜேஸ்வரிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி. மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன்” என கூறியுள்ளார்.