‘பக்கெட் பிரியாணி’ சாப்பிட்ட குடும்பத்தினருக்கு நேர்ந்த விபரீதம்.. அடுத்தடுத்து வாந்தி, மயக்கம்.. ஆம்பூரில் பரபரப்பு!!
பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரத்திற்குப் பிறகு, வீட்டில் இருந்தவர்களுக்கு அடுத்தடுத்து ஒருவருக்குப் பின் ஒருவராகத் தீவிர வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும், பாதிக்கப்பட்ட 6 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
திருப்பத்தூர், ஜுன் 05: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் பக்கெட் பிரியாணி வாங்கிச் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேருக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பெரியகரம், சென்ராயன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது குடும்பத்தினர் 6 பேர் தங்களது விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காகச் சென்னைக்குச் சென்று திரும்பியுள்ளனர். அப்போது, தான் அந்த குடும்பத்தினருக்கு இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க: டாஸ்மாக் பார் தகராறில் இளைஞர் அடித்துக் கொலை.. தப்பியோடிய நண்பர்களுக்கு வலைவீச்சு.. நெல்லையில் பயங்கரம்!
பிரபல ஹோட்டலில் ‘பக்கெட் பிரியாணி’:
சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 3-ஆம் தேதி அந்த குடும்பத்தினர் மீண்டும் தங்களது ஊருக்குத் திரும்பியுள்ளனர். அப்போது, மாலை சுமார் 4 மணியளவில் ஆம்பூரில் உள்ள ஒரு பிரபல தனியார் பிரியாணி ஹோட்டலில் இருந்து தங்களது வீட்டிற்குச் சாப்பிடுவதற்காகப் ‘பக்கெட் பிரியாணி’ வாங்கிக் கொண்டு சென்றுள்ளனர். வீட்டிற்குச் சென்றதும் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுள்ளனர்.
அடுத்தடுத்து நேர்ந்த உடல் உபாதைகள்:
பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரத்திற்குப் பிறகு, வீட்டில் இருந்தவர்களுக்கு அடுத்தடுத்து ஒருவருக்குப் பின் ஒருவராகத் தீவிர வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும், பாதிக்கப்பட்ட 6 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
போலீசார் தீவிர விசாரணை:
அதன்படி, ராஜேந்திரன் (62), ஞானமணி (55), வசந்தி (37), பொற்செல்வி (14) – சிறுமி, சுதீஷ் (13) – சிறுவன், தர்ஷன் (10) – சிறுவன் ஆகிய தற்போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கந்திலி காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து பிரியாணி தரம் கெட்டதாக இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: ‘கெட்டுப்போன சிக்கனில் பிரியாணி’.. 100க்கு மேற்பட்டோருக்கு பாதிப்பு.. இருவர் கவலைக்கிடம்!!
பிரபல கடையில் வாங்கிய பிரியாணியைச் சாப்பிட்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம், ஆம்பூர் மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.