தமிழக மின்சார வாரியத்தில் வரலாற்று சாதனை.. ஒரே நேரத்தில் 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு.. முதல்வர் விஜய் அதிரடி!!
TNEB Promotion News: தமிழ்நாடு மின்சார வாரிய வரலாற்றிலேயே முதல்முறையாக, 2012-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த 700 உதவிப் பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் உதவி செயற் பொறியாளர்களாகப் பதவி உயர்வு வழங்கி, ஆன்லைன் கலந்தாய்வு மூலம் வெளிப்படைத்தன்மையுடன் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 03: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்றது முதல், மின்சார வாரியத்தின் நிர்வாகச் செயல்பாடுகளில் பல்வேறு கட்டமைப்பு மாற்றங்களும், நிர்வாகச் சீர்திருத்தங்களும் தீவிரமாக மேற்கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக, மின்சார வாரியத்தில் பணி நியமனங்கள், பணி மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கையாள அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, மின்சார வாரிய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரே நேரத்தில் 700 உதவிப் பொறியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு – அமைச்சர் முக்கிய தகவல்
14 ஆண்டு காலக் காத்திருப்புக்குக் கிடைத்த தீர்வு:
கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர்களாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கு நீண்ட நாட்களாகப் பதவி உயர்வு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. தற்போது தவெக அரசு, அவர்களது பணி மூப்பைக் கணக்கில் கொண்டு, 700 உதவிப் பொறியாளர்களையும் ஒரே நேரத்தில் உதவி செயற்பொறியாளர்களாக உயர்த்திப் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
ஆன்லைன் கலந்தாய்வு & லஞ்சமில்லாப் பணிப்பகிர்வு:
ஏற்கனவே மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்த 200 உதவி செயற்பொறியாளர்களுக்கு, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆன்லைன் கலந்தாய்வு மூலம் எந்தவிதச் செலவினங்களோ அல்லது பரிந்துரைகளோ இன்றி வெளிப்படைத்தன்மையுடன் பணிமாறுதல்கள் வழங்கப்பட்டன.
அதன்மூலம் காலியான இடங்களைக் கணக்கில் கொண்டு, தற்போது பதவி உயர்வு பெற்றுள்ள 700 பொறியாளர்களுக்கும் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் அவர்களின் இருப்பிடத்திற்கும், ஏற்கனவே பணியாற்றிய இடங்களுக்கும் அருகாமையில் உள்ள காலிப் பணியிடங்களை அவர்களின் விருப்பப் பட்டியலின்படியே தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விரைவிலேயே புதிய பொறுப்புகளை ஏற்கத் திட்டம்:
பதவி உயர்வு ஆணையைப் பெற்றுள்ள 700 உதவி செயற்பொறியாளர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய மின்சார வாரியப் பிரிவுகள் மற்றும் வட்டங்களில் விரைவிலேயே அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்க உள்ளனர்.
ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பொறியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பதும், அது முழுக்க முழுக்க இடைத்தரகர்கள் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் நிறைவேற்றப்பட்டிருப்பதும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் சங்கங்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் தீவிரமடையும் நாய்க்கடி அவலம்.. இந்த ஆண்டில் இதுவரை 4.68 லட்சம் பேர் பாதிப்பு; 24 பேர் உயிரிழந்த சோகம்!
குறிப்பாக, எந்தவிதமான மறைமுகச் செலவினங்களோ, அரசியல் பரிந்துரைகளோ இல்லாமல், தங்களின் உழைப்பிற்கும் பணி மூப்பிற்கும் உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாகப் பதவி உயர்வு பெற்ற பொறியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.