மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு.. சிபிசிஐடி-க்கு மாற்றி அதிரடி உத்தரவு!
சிந்தாதிரிப்பேட்டை போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஓராண்டாகப் பணிபுரிந்து வந்த கோபிநாத் என்ற தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியரே இந்த திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அந்த ஹார்டு டிஸ்க்குகளைத் திருடிக்கொண்டு பெங்களூருவுக்குச் சென்று, அங்குள்ள முரளி என்ற தனியார் நிறுவன உரிமையாளரிடம் விற்பனை செய்ததும் அம்பலமானது.
சென்னை, ஜுன் 08: சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) தலைமை அலுவலகத்தில் மிக முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், சென்னை காவல்துறையின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றப்பட்டு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான வழக்கின் முழு விவரம் பின்வருமாறு, கடந்த மாதம் சென்னை அண்ணாசாலையில் இயங்கி வரக்கூடிய மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள கணினிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் ரேம்கள் திருடப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதையும் படிக்க: “ரூ.30,000 கோடி செலவு”.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தம்?.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்!!
சிக்கிய முக்கிய ஆவணங்கள்:
இதுகுறித்து கடந்த மே மாதம் 2-ஆம் தேதி மின்வாரிய உதவிப் பொறியாளர் (AE) மலர்விழி என்பவர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் திருட்டு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். காணாமல் போன அந்த ஹார்டு டிஸ்க்குகளில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் டெண்டர் ஆவணங்கள் மற்றும் நிலக்கரி கொள்முதல் தொடர்பான மிக முக்கிய ஆவணங்கள் மற்றும் தரவுகள் அடங்கியிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒப்பந்த ஊழியர் உட்பட இருவர் கைது
சிந்தாதிரிப்பேட்டை போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஓராண்டாகப் பணிபுரிந்து வந்த கோபிநாத் என்ற தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியரே இந்த திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அந்த ஹார்டு டிஸ்க்குகளைத் திருடிக்கொண்டு பெங்களூருவுக்குச் சென்று, அங்குள்ள முரளி என்ற தனியார் நிறுவன உரிமையாளரிடம் விற்பனை செய்ததும் அம்பலமானது. இதனையடுத்து, வழக்கில் தொடர்புடைய முதன்மைப் குற்றவாளி கோபிநாத் மற்றும் திருட்டுப் பொருட்களை வாங்கிய முரளி ஆகிய இருவரையும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது ஏன்?
கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், மாநில மின்சார வாரியத்தின் நிலக்கரி கொள்முதல் மற்றும் டெண்டர் விபரங்கள் போன்ற மிக முக்கிய அட்மினிஸ்ட்ரேஷன் ஆவணங்கள் திருடப்பட்டிருப்பதால், இதன் பின்னணியில் வேறு ஏதேனும் பெரிய சதி உள்ளதா அல்லது வேறு யாருக்கேனும் இதில் தொடர்பிருக்கிறதா என்பது குறித்துப் பரந்த அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் பல தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன.
இதையும் படிக்க : இனி கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைனில் மட்டுமே அனுமதி – வெளியான அறிவிப்பு
இதனையடுத்து, வழக்கை மேலும் துரிதப்படுத்தவும், ஆழமாக விசாரிக்கவும் சென்னை மாநகர காவல்துறையின் பரிந்துரையின் பேரில், இந்த மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு தற்போது அதிகாரப்பூர்வமாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.