தமிழக கோயில்களில் VIP தரிசனத்திற்கு அதிரடி செக்.. அறநிலையத்துறை வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!!
Tamilnadu Temples Mobile Ban: தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செல்போன் பயன்பாட்டிற்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. மேலும், சினிமா பிரபலங்கள் மற்றும் VIP-க்கள் கோயில் தரிசனம் செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே அனுமதி பெற வேண்டும் உட்படப் பல்வேறு அதிரடிக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை, ஆகஸ்ட் 08: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சுமார் 44,000 திருக்கோயில்களில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், சாமானிய பக்தர்கள் எவ்வித இடையூறுகளுமின்றித் தடையின்றி தரிசனம் செய்வதை உறுதி செய்யவும், பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் தரிசனம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறநிலையத்துறை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!
VIP தரிசன வழிகாட்டுதல்கள்:
கோயில்களில் விஐபிக்கள் தரிசனம் செய்ய வரும்போது எவ்வித அசம்பாவிதங்களும் அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் பின்வரும் வழிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கோயிலுக்கு வருகை தருவதாக இருந்தால், குறைந்தபட்சம் ஒருநாளுக்கு முன்பாகவே கோயில் நிர்வாகத்திற்கும் ஆணையர் அலுவலகத்திற்கும் முறைப்படி தெரியப்படுத்த வேண்டும்.
திடீர் வருகைக்கு அனுமதியில்லை:
முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் இறுதி நேரத்தில் திடீரென வரும் விஐபிக்களைக் கோயிலுக்குள் சிறப்பு முறையில் அனுமதிக்கக் கூடாது. பிரபலங்களின் வருகையின் போது சாதாரணப் பொது பக்தர்களின் தரிசனத்திற்கு எவ்வித இடையூறும், கால தாமதமும் ஏற்படாத வகையில் அவர்களின் நுழைவு மற்றும் இயக்கத்தைச் சீராக ஒழுங்குபடுத்த வேண்டும். விஐபிக்கள் வருகையின் போது கோயில் வளாகத்திற்குள்ளும், கருவறைப் பகுதியிலும் புகைப்படம் எடுப்பதற்கோ அல்லது காணொளி பதிவு செய்வதற்கோ எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.
புனிதத்தன்மை பாதுகாப்பு:
முக்கியப் பிரமுகர்களின் வருகையால் கோயிலின் பாரம்பரிய மரபு சார்ந்த ஒழுங்கும், புனிதத்தன்மையும் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. பாதுகாப்பிற்கு அவசியமான அதிகாரிகள் மற்றும் முன்கூட்டியே அனுமதி பெறப்பட்ட நபர் தவிர வேறு யாரையும் விஐபிக்களுடன் கூட்டமாகச் செல்ல அனுமதிக்கக் கூடாது.
செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்குத் தடை:
நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி, கோயில்களின் இறை நம்பிக்கையையும் அமைதியையும் பேணுவதற்காகக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரீல்ஸ் மற்றும் போட்டோக்களுக்குத் தடை: கோயிலுக்குள் தெய்வச் சிலைகளைப் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது மற்றும் சமூக வலைதளங்களுக்காக ரீல்ஸ் செய்வதற்குக் கடுமையான தடை விதிக்கப்படுகிறது.
மேலும் படிக்க: அவையில் அப்பாவை காணோம் என கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!
செப்டம்பர் 1 முதல் முழுமையான தடை:
தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மைத் திருக்கோயில்களிலும் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல முழுமையாகத் தடை செய்யப்படுகிறது. பக்தர்கள் தங்கள் செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்ல ஏதுவாக, அடுத்த 20 நாட்களுக்குள் அனைத்து முதுநிலைத் திருக்கோயில்களிலும் ‘செல்போன் பாதுகாப்பு மைய வசதிகள்’ அமைத்துத் தர உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் எவ்வித விதிவிலக்கும் இன்றி அனைத்துக் கோயில்களிலும் மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.