திருப்பூரில் கொடூர விபத்து.. டீசல் லாரி – கார் நேருக்கு நேர் மோதல்.. 6 பேர் துடிதுடித்து பலி!
Tiruppur Car And Lorry Accident: திருப்பூர் மாவட்டத்தில் கார் மற்றும் டீசல் டேங்கர் லாரி மோதிய கொடூர விபத்தில் காரில் பயணித்த சிறுவர்கள், பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி- விஜயமங்கலம் சாலையில் காக்கா பள்ளம் அருகே டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதே சாலையில், கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரில் பெண்கள், சிறுவர்கள் என சுமார் 6 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி மற்றும் கார் ஒன்றுக் கொன்று நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரில் பயணித்த 6 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக ஊத்துக்குளி காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த 6 பேர்
இதில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள 4 பேர் மீட்கப்பட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி அடுத்தடுத்து 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏற்கனவே சம்பவ இடத்தில் உயிர் இழந்த இருவர் உட்பட 6 பேரின் சடலங்கள் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.
மேலும் படிக்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் ட்ரிங்க்ஸ்.. பாலுடன் சாக்லேட் மால்ட் ஹெல்த் மிக்ஸ்.. இனி தினமும் ஹேப்பி தான்!




தலைமைறைவான டீசல் லாரி ஓட்டுநருக்கு வலை
இந்த கொடூர விபத்து தொடர்பாக ஊத்துக்குழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், அவர்கள் யார், எங்கிருந்து வருகின்றனர், விபத்து எப்படி நிகழ்ந்தது என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தில் சிக்கிய டீசல் லாரியின் ஓட்டுனர் சம்பவத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொடூர விபத்தில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்தால் போக்குவரத்து நெரிசல்
இந்த சாலை விபத்தால் அந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலமாக அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். இந்த கொடூர சாலை விபத்து சம்பவமும், உயிரிழப்பு சம்பவமும் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: நிலத்தை அளக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்.. போலீசின் செக்மேட்டில் சிக்கிய சர்வேயர்.. தென்காசி டிஎஸ்பி பாலசுதரின் பக்கா மாஸ்டர் பிளான்!