அஜித்குமார் கொடூர கொலை வழக்கு… மானாமதுரை டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்.. என்ன காரணம்!
Thiruppuvanam Ajith Kumar Murder Case: சிவகங்கை மாவட்டத்தில் நகை திருடியதாக கோயில் காவலாளியை போலீசார் அடித்து கொலை செய்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் டி. எஸ். பி. சண்முகசுந்தரத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிடிவாரண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்த அஜித் குமார் நகை திருடியதாக நிகிதா என்ற பெண் அளித்த புகாரின் பேரில், அவரை போலீசார் கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், திருபுவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில், தனக்கு முன் ஜாமீன் கோரி டிஎஸ்பி சண்முகசுந்தரம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இரு முறை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
விசாரணைக்கு ஆஜராகாத டிஎஸ்பி
இதைத் தொடர்ந்து தனிப்படை காவலர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு விசாரணை நடைபெற்ற போது, டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்பட 4 பெயரை கைது செய்யவும், இந்த விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும், கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டிருந்த டிஎஸ்பி சண்முகசுந்தரம் உட்பட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற விசாரணைக்கு டிஎஸ்பி சண்முகசுந்தரம் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், டிஎஸ்பி சண்முகசுந்தரத்துக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
மேலும் படிக்க: கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்.. தானும் தூக்கிட்டு தற்கொலை!




மார்ச் 5- ஆம் தேதிக்குள் டிஎஸ்பியை ஆஜர்படுத்த பிடிவாரண்ட்
அதன்படி, சிபிஐ அதிகாரிகள் மற்றும் தமிழக போலீசார் சேர்ந்து வருகிற மார்ச் 5- ஆம் தேதிக்குள் ( வியாழக்கிழமை ) டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், தலைமறைவாக இருந்து வரும் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை கைது செய்வதற்கு சிபிஐ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மடப்புரம் கோயிலுக்கு வந்திருந்த நிகிதா என்ற பெண் தனது கார் சாவியை அஜித்குமாரிடம் கொடுத்து வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு கூறியிருந்தாராம்.
அஜித் குமாரை அடித்து கொலை செய்த போலீசார்
அப்போது, கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்தபோது, தனது காரில் இருந்த நகையை காணவில்லை எனவும், அந்த நகையை அஜித்குமார் தான் திருடியதாகவும் திருபுவனம் காவல் நிலையத்தில் நிகிதா புகார் அளித்திருந்தார். ஆனால், அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் காவலாளி அஜித் குமாரை போலீசார் கோவிலின் பின்புறம் வைத்து கொடூரமாக தாக்கி இருந்தனர். இதில், காவலாளி அஜித் குமார் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இவ்வளவு கொடூரமான சம்பவத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: காகங்கள் கொத்து கொத்தாக உயிரிழப்பு.. பறவை காய்ச்சல் பாதிப்பா? சென்னையை தொடர்ந்து கடலூரிலும் அச்சம்!