“பொதுவாழ்வில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன்”.. முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். அதிரடி அறிவிப்பு!
தனது இந்த தற்காலிக விலகல் முடிவு முற்றிலும் தனிப்பட்ட ரீதியிலானது என்றும், தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடவும், சில தனிப்பட்ட ஆய்வுகள் மற்றும் பணிகளில் கவனம் செலுத்தவும் இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் பி.டி.ஆர் தெரிவித்துள்ளார். எனது பொதுவாழ்வில் இருந்து சற்று தற்காலிகமாக விலகி, ஓய்வெடுக்க வேண்டிய தருணம் இதுவெனக் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநிலத்தில் புதிய அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில், திமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது பொதுவாழ்வில் இருந்து தற்காலிகமாக விலகியிருக்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட பி.டி.ஆருக்கு, தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய தொகுதி நிலவரங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழலைக் கணக்கில் கொண்டு, அவர் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: “10.50 லட்சம் கோடி கடன் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்”.. அமைச்சர் கீர்த்தனாவுக்கு தங்கம் தென்னரசு கடும் கண்டனம்!
மக்கள் தீர்ப்பை முழு மனதுடன் ஏற்கிறேன்:
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேர்தல் களத்தில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தது என்பது, எனக்கும் எனது குழுவினருக்கும் இரவு-பகல் பாராத ஒரு தொடர் பொறுப்பாகவே இருந்தது. இப்போது, ஒரு சில வாரங்கள் அந்தப் பொறுப்புகளில் இருந்து விலகி, எனக்கான நேரத்தை நானே முடிவு செய்யும் ஒரு சாதாரண குடிமகனாக வாழ ஆவலோடு இருக்கிறேன். தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கவனிக்கும் போது, எனது பொதுவாழ்வில் இருந்து சற்று தற்காலிகமாக விலகி, ஓய்வெடுக்க வேண்டிய தருணம் இதுவெனக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட காரணங்கள் மற்றும் அடுத்தகட்ட நகர்வு:
நான் அமைச்சராக இருந்த காலத்தில், வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும், சொற்பொழிவு ஆற்றவும் வந்த அழைப்புகளை ஏற்க எனக்குப் பலமுறை அனுமதி மறுக்கப்பட்டது. இப்போது கிடைத்துள்ள இந்த இடைவெளி வெளிநாடுகளில் இருந்து நீண்ட நாட்களாக இருக்கும் அழைப்புகளுக்குப் பதிலளிக்க எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். முன்பே குறிப்பிட்டது போல, ‘ஹார்பர் காலின்ஸ்’ நிறுவனத்திற்காக நான் எழுதவிருக்கும் புத்தகத்தின் வேலைகள் ஏற்கனவே தாமதமாகிவிட்டன.
மேலும் படிக்க: தவெக அரசின் உண்மை முகத்தை மக்கள் உணர தொடங்கிவிட்டனர்… எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி!
குடும்பத்துடன் நேரம் செலவிடுவேன்:
தனது இந்த தற்காலிக விலகல் முடிவு முற்றிலும் தனிப்பட்ட ரீதியிலானது என்றும், தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடவும், சில தனிப்பட்ட ஆய்வுகள் மற்றும் பணிகளில் கவனம் செலுத்தவும் இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் பி.டி.ஆர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்ட விதிகள், நிதி மேலாண்மை மற்றும் சர்வதேச அளவிலான பொருளாதாரத் தரவுகள் குறித்து எப்போதும் ஆழமான புரிதல்களைப் பகிர்ந்து வரும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் இந்த திடீர் தற்காலிக ஓய்வு அறிவிப்பு, திமுக வட்டாரங்களிலும் ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்திலும் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இது நிரந்தரமான முடிவு அல்ல என்றும், தற்காலிக இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது மக்கள் பணிகளைத் தொடரப் போவதாகவும் அவர் தனது அறிக்கையின் வாயிலாகத் தொண்டர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.