Magalir Vidiyal Payanam Scheme: ஓசி பயணம்..! மக்களிடையே வார்த்தையை விட்ட திமுக எம்.எல்.ஏ.. அண்ணாமலை கண்டனம்!
Free Cus Travel: திமுக எம்.எல்.ஏ மகாராஜன், மகளிர் விடியல் திட்டத்தை "ஓசி பயணம்" என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது, மு.க.ஸ்டாலின் அரசின் பெண்களுக்கான முக்கிய திட்டத்திற்கு எதிரான விமர்சனமாக பார்க்கப்படுகிறது. அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சர்ச்சை 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டிப்பட்டி, ஜூன் 11: கடந்த 2021ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) தலைமையில் தமிழ்நாடு அரசு ஆட்சி அமைந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும், தமிழ்நாட்டில் முதல் கையெழுத்தாக மகளிர் விடியல் பயணத் திட்டம் (Magalir Vidiyal Payanam Scheme) கையெழுத்தானது. இதனால், கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் இந்த திட்டத்தால் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின்மூலம், பெண்கள் மாதத்திற்கு சுமார் ரூ. 888 சேமிப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், திமுக எம்.எல்.ஏ ஒருவர், மகளிர் விடியல் திட்டத்தை ஓசி பயணம் என்று குறிப்பிட்டுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.
என்ன சொன்னார் திமுக எம்.எல்.ஏ..?
ஆண்டிப்பட்டி திமுக எம்.எல்.ஏ மகாராஜன் பொதுமக்களிடையே பேசுகையில், “ தமிழ்நாட்டில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன செய்வோம் என்று சொன்னாம். மக்களாகிய நீங்கள் மாலை 4 மணி வரை வேலை செய்துவிட்டு, மாலை 4 மணிக்கு மேல் ஓசியாக பேருந்தில் சென்று தேனிக்கு செல்லுங்கள், ஆண்டிப்பட்டிக்கு செல்லுங்கள், உசிலம்பட்டிக்கு செல்லுங்கள். ஆம்பளை ஆட்கள் எல்லாம் வீட்டில் சோறு சமைக்கட்டும். இப்போது, அதே மாதிரி பெண்களாகிய நீங்கள் எல்லா இடத்திற்கும் சென்று வருகிறீர்கள் தானே!




கடந்த 3 ஆண்டுகளாக இந்த பகுதியில் எவ்வளவு வேலை நடந்துள்ளது. இப்போது, இந்த பகுதி சாலை அமைக்க இருக்கிறோம். இதில் மீண்டும் பேருந்தை விடப்போகிறோம். அந்தநேரத்தில், நீங்கள் ஏறி ஓசியாகதான் பயணம் செய்ய போகிறீர்கள்” என்று தெரிவித்தார்.
அண்ணாமலை கண்டனம்:
பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று… pic.twitter.com/2Yeyb674TM
— K.Annamalai (@annamalai_k) June 11, 2025
இதுகுறித்து முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், “பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் நமது தாய்மார்கள், பெண்களை ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் அமர்ந்திருக்கிறார்.
தற்போது, ஆண்டிப்பட்டி திமுக எம்.எல்.ஏ மகாராஜன், மீண்டும் நமது பெண்களை ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார். மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே தவிர, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்தில் அல்ல, எங்கிருந்து வருகிறது இந்த திமிரும் ஆணவமும்? வருகின்ற 2026 சட்டமன்றதேர்தலில், ஒவ்வொரு திமுக எம்.எல்.ஏக்களையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.” என்று பதிவிட்டிருந்தார்.