TNSTC Special Buses: வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள்.. பயணிகளுக்கு போக்குவரத்துக் கழகம் ஸ்பெஷல் ஏற்பாடு!
Weekend Bus Services Chennai: சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வார இறுதி நாட்களில் (ஜூன் 13-15) பேருந்துப் போக்குவரத்துப் பிரச்சனைக்குத் தீர்வாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது. திருச்சி, மதுரை போன்ற பல்வேறு இடங்களுக்கு 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் முன்பதிவு செய்து பயணத்தை எளிதாக்கிக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன் 11: சென்னை கிளாம்பாக்கத்தில் (Kalaignar Centenary Bus Terminus) கடந்த 2025 ஜூன் 6ம் தேதி முதல் 2025 ஜூன் 8ம் தேதி வரை தென்மாவட்டங்களுக்கு செல்ல தேவையான பேருந்துகள் இல்லை என்று பயணிகள் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தொடர்ந்து, திராவிட முன்னேற்ற கழக அரசின் மீதும், போக்குவரத்து கழகத்தின் (Tamilnadu Transport Corporation) மீதும் புகார்களை அடுக்கினர். இந்தநிலையில், வருகின்ற 2025 ஜூன் 13ம் தேதி முதல் 2025 ஜூன் 15ம் தேதியான வார இறுதி நாட்கள் வரும் நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிக்கை வெளியீடு:
இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், “வருகின்ற 2025 ஜூன் 13ம் தேதி (வெள்ளிக்கிழமை), 2025 ஜூன் 14ம் தேதி (சனிக்கிழமை), 2025 ஜூன் 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களை கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுக்கு பதிலாக, கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.




சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், திருவண்ணாமலை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 2025 ஜூன் 13ம் தேதி 385 பேருந்துகளும், 2025 ஜூன் 14ம் தேதி 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டிணம்,பெங்களூரு, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய இடங்களுக்கு 2025 ஜூன் 13ம் தேதி அன்று 55 பேருந்துகளும், 2025 ஜூன் 14ம் தேதி அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் முக்கிய நாட்களில் இருந்து பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 2025 ஜூன் 13ம் தேதி மற்றும் 2025 ஜூன் 14ம் தேதி ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
2025 ஜூன் 15ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களுக்கு பயணிகள் திரும்ப வசதியாக அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வளவு பேர் பயணம் செய்ய திட்டம்..?
#NewsUpdate “வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்” – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிக்கை #TNSTC #Transport #PettiKadaiMedia pic.twitter.com/0YjKYjsaJk
— Petti Kadai Media (@PettiKadaimedia) June 11, 2025
2025 ஜூன் 13ம் தேதி 6,158 பயணிகளும், 2025 ஜூன் 14ம் தேதி 2652 பயணிகளும் மற்றும் 2025 ஜூன் 15ம் தேதி 6,469 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, பயணிகள் www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்திருந்தார்.