Tamil Nadu CM MK Stalin: தோளில் துண்டு போடும் போலி விவசாயி நாங்கள் இல்லை.. ஈரோட்டில் விவசாயிகள் முன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
Tamil Nadu CM Stalin's Erode-Salem Visit: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மற்றும் சேலம் ஆகிய இடங்களுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றார். அங்கு வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கான புதிய திட்டங்களை அறிவித்தார். வேளாண் துறையின் பெயர் மாற்றம் குறித்தும், விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார். தமிழ்நாட்டின் விவசாய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பற்றியும் பேசினார்.

ஈரோடு, ஜூன் 11: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) 2 நாள் பயணமாக ஈரோடு மற்றும் சேலத்திற்கு சென்னையில் இருந்து இன்று அதாவது 2025 ஜூன் 11ம் தேதி கிளம்பினார். முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இறங்கியபோது அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு (Minister E.V.Velu) மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி (Senthil Balaji) உள்பட பலரும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதனை தொடர்ந்து, இரு புறமும் நின்று திமுக தொண்டர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க, அதை மகிச்சியாக ஏற்றுகொண்டார். தொடர்ச்சியாக ஈரோட்டில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
வேளாண்துறையின் பெயரை மாற்றியது ஏன்?
வேளாண்துறையின் பெயரை மாற்றியது குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “டெல்டா பாசனத்திற்கான தண்ணீரை நாளைய தினம் (12.06.2025) மேட்டூர் அணையில் இருந்து நான் திறந்து வைப்பதற்கு முன்னாடி, இன்று மேற்கு மண்டல விவசாயக்குடி மக்களான உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வேளாண் கண்காட்சி மற்றும் கருந்தரங்கத்தை ஈரோட்டில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கான பாராட்டுகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.




விவசாய மக்களால்தான் இந்த மண்ணும், மக்களும் மகிழ்ச்சியோடு, மனநிறைவோடு உணவு பொருட்கள் கிடைத்து உடல் வலிமையோடு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்தவுடன் வேளாண்மை துறை என்று சொல்லாமல், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என பெயர் மாற்றினோம். இதன்மூலம், உழவர்களுக்கும் பல்வேறு நலம் காக்கும் திட்டங்களும் கொண்டு வந்தோம்.
விவசாயிகளுக்கு முதல் ஆளாய் துணை நிற்போம்:
#Live: பெருந்துறை வேளாண் கண்காட்சி & கருத்தரங்கத்தில் சிறப்புரைhttps://t.co/YFJPRwwsZM
— M.K.Stalin (@mkstalin) June 11, 2025
தமிழ்நாட்டு வரலாற்றில் வேளாண்துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை கொண்டு வந்தோம். கடந்த 4 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தியில் 4,52,000 மெட்ரிக் டன் கொண்டு வந்திருக்கிறோம். இப்படி திராவிட மாடல் ஆட்சியில் செய்தது ஏராளம். தமிழ்நாடு முழுக்க 2,00,000 வேளாண் மின் இணைப்புகள் அறிவிக்கப்பட்டு, இதுவரை 1,84,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி விவசாயிகளுக்கு பார்த்து பார்த்து செய்வதால்தான் வேளாண்மையும் பெருகி இருக்கிறது, உழவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அகில இந்திய அளவில் பயிர் உற்பத்தி திறனில் தமிழ்நாடு பெற்றுள்ள இடங்களை சொல்லவேண்டுமென்றால், சிறுதானியம் மற்றும் துவரையில் முதலிடம். மக்காச்சோள உற்பத்தியில் தமிழ்நாடு 2வது இடம். வெறுமனே தோளில் துண்டு போட்டுக்கிட்டு வேஷம் போடுற போலி விவசாயி இல்லை நாங்கள். உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால், முதல் ஆளாய் துணை நிற்போம். ” என்று தெரிவித்தார்.