10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் கட்டாயமில்லையா? – தமிழக அரசு விளக்கம்
Public Exam Confusion : 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை என்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த தகவலை தமிழக அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, பிப்ரவரி 11 : 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை என்றும் தமிழை தாய்மொழியாக கொண்டிராத சிறுபாண்மை மாணவர்கள் தமிழ் தேர்வு கட்டாயமில்லை என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது எதிர் கட்சிகள் மற்றும் மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறுபாண்மையின மாணவர்கள் தங்களது தாய் மொழியிலேயே தேர்வு எழுதலாம் என்றும் தகவல்கள் பரவி வந்தன.
இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த தகவல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு பிரிவு இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் இந்த தகவல் முற்றிலும் உண்மையற்றது என விளக்கமளித்துள்ளது.




வதந்திக்கு காரணம் என்ன?
மொழி பாடம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை சிறுபாண்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து விலக்கு அளித்திருந்தது. பள்ளிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து 2023 – 2024 கல்வியாண்டு வரை மட்டும் நீட்டிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2025 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் இவ்விலக்கு வழங்கப்படவில்லை என அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழக அரசு விளக்கம்
தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிப்பதாகப் பரப்பப்படும் தவறான தகவல் ! @CMOTamilnadu @TNDIPRNEWS https://t.co/GDAEfZ0NFr pic.twitter.com/qVLECsSYwe
— TN Fact Check (@tn_factcheck) February 11, 2026
தமிழ் தேர்வு எழுதிய மாணவர்கள் விவரம்
கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 8,86,184 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் பார்ட் 1 பிரிவில் 8,86,089 ஆகிய மாணவர்கள் தேர்வு எழுதினர். பார்ட் 1 பிரிவில் மற்ற மொழிகளில் 95 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இந்த 95 பேரும் 9 ஆம் வகுப்பு வரை பிற மாநிலங்களில் படித்து, 10 ஆம் வகுப்பு மட்டும் தமிழ்நாட்டில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை என்ற தகவல் முற்றிலும் தவறானது என்றும், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.