சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு அண்ணா சிறப்பு பதக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு..
காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளைச் சேர்ந்த மொத்தம் 180 பேருக்கு அவர்களின் மெச்சத்தக்க பணியை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
செப்டம்பர் 14, 2026: தமிழ்நாட்டில் காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 180 பேருக்கு “மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள்” வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறை ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதைப் பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி “அண்ணா சிறப்புப் பதக்கங்கள்” வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய நபர்கள்:
அதன்படி, இந்த ஆண்டு காவல் துறையில் தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 138 பேருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 20 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரையிலான 10 பேருக்கும், ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
இதுதவிர, விரல்ரேகைப் பிரிவில் பணியாற்றும் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், தடய அறிவியல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 4 அலுவலர்களுக்கும் அண்ணா சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? உதயநிதி காட்டம்..
180 பேருக்கு அண்ணா சிறப்பு பதக்கம் அறிவிப்பு:
இவ்வாறு, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளைச் சேர்ந்த மொத்தம் 180 பேருக்கு அவர்களின் மெச்சத்தக்க பணியை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி இந்தப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.