தொடர் விடுமுறை.. சொந்த ஊர் செல்ல திட்டமா.. இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Special Buses Announced : தமிழகத்தில் உழைப்பாளர் தின அரசு விடுமுறை, வாரவிடுமுறையை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) மே 1- ஆம் தேதி உழைப்பாளர் தின அரசு விடுமுறையாகும். இதைத் தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாகும். இதனால், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால், வெளியூர்களில் வசித்து வரும் ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பார்கள். அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் நெரிசல் இன்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து
தமிழகத்தில் நாளை மே 1 உழைப்பாளர் தினம். இதை தொடர்ந்து, இரு நாட்கள் வார விடுமுறை ஆகும். 3 நாட்கள் தொடர் விடுமுறையால் ஏராளமான வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். அவர்களின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கு இன்று வியாழக்கிழமை ( ஏப்ரல் 30) 475 பேருந்துகளும், மே 1, 2- ஆம் தேதிகளில் 315 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
மேலும் படிக்க: வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்.. மே 2ல் தமிழகம் வரும் வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள்!!




கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து
இதே போல, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு இன்று வியாழக்கிழமை ( ஏப்ரல் 30) முதல் நாளை வெள்ளிக்கிழமை ( மே 1) வரை 160 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போல, சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து தலா 14 அரசு சிறப்பு பேருந்துகளும், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சுமார் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சொந்த ஊர்களில் இருந்து வெளியூர் திரும்புவதற்கு
இதே போல வருகிற மே 3- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து வெளியூர் திரும்புவதற்கு வசதியாக அனைத்து ஊர்களில் இருந்தும் சுமார் 615 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பொது மக்களின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் பயணிப்பதற்காக தற்போது வரை சுமார்28 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த பேருந்துகளில் பயணம் செய்வதற்கு www.tnstc.in மற்றும் tnstc மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை… 1,000 அரசு ஊழியர்களுக்குத் தீவிர பயிற்சி!