புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டு வரலாமா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Madras High Court : புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு 4.5 லிட்டர் மது கொண்டு வருவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் தொடுத்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது .
சென்னை அருகே உள்ள மீஞ்சூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் ஆந்திர மாநிலத்தில் இருந்து 3.4 லிட்டர் மதுவை விற்பனைக்காக கொண்டு வந்ததாகவும், அப்போது, ஏழாவூர் சோதனை சாவடியில் கும்பிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அந்த மதுவை பறிமுதல் செய்ததுடன் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தமிழக அரசாணையின் படி, 4.5 லிட்டர் மதுவை சொந்த பயன்பாட்டுக்காக வைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நாங்கள் சொந்த பயன்பாட்டுக்காக மதுவை கொண்டு வந்த காரணத்தால் எங்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து இருந்த நீதிமன்றம் புலன் விசாரணைக்கு தடை விதித்திருந்தது.
எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்
இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 29) நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பில், தமிழக அரசாணையின்படி 4.5 லிட்டர் மதுவை தனிநபர் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் என்ற உத்தரவு இருக்கும் நிலையில், நாங்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து 3.4 லிட்டர் மது கொண்டு வந்த காரணத்தால் எங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று முறையிட்டனர்.
மேலும் படிக்க: நாளை முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை ரிப்போர்ட் இதோ..




பிற மாநில மதுவுக்கு தமிழத்தில் அனுமதியில்லை
அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் தமிழகத்தில் தயார் செய்த மதுவை மட்டுமே 4.5 லிட்டர் தனிநபர் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும், பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரக்கூடிய மதுபானங்கள் எந்த வகையிலும் பொருந்தாது என்று தெரிவித்தார். மேலும், இதற்கான விளக்கங்களை உள்துறை செயலாளரிடம் சமர்ப்பித்திருப்பதாக வழக்கறிஞர் குறிப்பிட்டார். முந்தைய தீர்ப்புகளில் இந்த அம்சத்தை கருத்தில் கொள்ளாமல் வழங்கப்பட்டதாகவும், எனவே, இந்த விவகாரத்தில் பொருந்தாது என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
புதுச்சேரியில் இருந்து மது கொண்டு வர அனுமதியில்லை
மேலும், புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மதுபானம் கொண்டு வரலாம் என்று உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான கருத்து பரவி வருவதாக சுட்டிக்காட்டினார். இந்த விளக்கங்களை கேட்ட நீதிபதி நிர்மல் குமார், தமிழகத்தில் தயார் செய்யப்பட்ட மதுபானங்களை மட்டுமே 4.5 லிட்டர் தனி நபர் பயன்பாட்டுக்காக வைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்ததுடன், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வெளி மாநிலங்களில் இருந்து 90 மில்லி அளவு மதுபானம் மட்டுமே தமிழகத்திற்கு கொண்டுவர முடியும் என்று விளக்கம் அளித்தார்.
மேலும் படிக்க: தவெக வேட்பாளர்களுடன் விஜய் நாளை முக்கிய ஆலோசனை.. பேசப்படும் விஷயங்கள் என்ன?