திருச்சி செவிலியர் மாணவி உயிரிழந்த சம்பவம்: சகோதரிக்கு பணி ஆணை- வீட்டு மனை பட்டா!
Trichy Nursing Student Died: திருச்சி அரசு மருத்துவமனையில் புதுக்கோட்டை செவிலியர் மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா மற்றும் சகோதரிக்கு தற்காலிக பணி நியமன ஆணையை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் ஆட்சியர் அருணா ஆகியோர் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள மணக்குடிபட்டியை சேர்ந்த சேட்டு மகள் சீதாலட்சுமி. இவர், திருச்சியில் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் 3- ஆம் ஆண்டு பட்டம் படித்து வந்தார். இந்த நிலையில், சீதாலட்சுமியின் மூக்கில் சதை வளர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த சதையை அகற்றுவதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் மாணவி சீதாலட்சுமி அனுமதிக்கபட்டிருந்தார். இவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில், முன்னதாக மயக்க மருந்து செலுத்தப்பட்டது. இதில், மயக்க மருந்து அதிகமாக செலுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவரது உடல் நிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டு மாணவி சீதாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உயிரிழந்த மாணவி சீதாலட்சுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உதவி செய்துள்ளது.
செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி
அதன்படி, புதுக்கோட்டையில் உள்ள மாணவி சீதாலட்சுமியின் வீட்டுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் புதுக்கோட்டை ஆட்சியர் அருணா ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை ( மே 24- ஆம் தேதி) நேரடியாக சென்றனர். அங்கு, சீதாலட்சுமியின் பெற்றோரிடம் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்ததுடன், அவர்களிடம் அரசின் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மாணவி சீதாலட்சுமியின் சகோதரியான புவனேஸ்வரிக்கு தற்காலிக பணி நியமன ஆணை ஆகியவற்றை அமைச்சர் முகமது பர்வேஷ் வழங்கினார்.
மேலும் படிக்க: கோவை சிறுமி கொலையின் பரபரப்பு பின்னணி.. ஐஜி ரம்யா பாரதி விளக்கம்!




உரிய நடவடிக்கை கோரி செவிலிய மாணவிகள் போராட்டம்
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள கோரி சக செவிலியர் மாணவர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு பல்வேறு கட்ட சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் சமாதானம் செய்ய முயன்றும் போராட்டம் தொடர்ந்தது. பின்னர், திருச்சி மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, செவிலியர் மாணவிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அரசு சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை
மேலும், மாணவியின் குடும்பத்துக்கு அரசு உதவி வழங்குவது மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் அடிப்படையில், தற்போது, மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்வதற்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: மீண்டும் எகிறியது சுங்க கட்டணம்.. அதிர்ச்சியில் தமிழக வாகன ஓட்டிகள்.. எவ்வளவு உயர்வு தெரியுமா?