Shozhinganallur Constituency Election 2026: தமிழகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதி.. முக்கிய பிரச்சனைகள் என்ன?
Tamil Nadu Elections 2026: அதே நேரத்தில் சோழிங்கநல்லூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல், மழைநீர் வடிகால் பிரச்சினை போன்றவை இங்கு முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.
சென்னை, மார்ச் 11, 2026: சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பெரிய தொகுதியாகவும் பார்க்கப்படுகிறது. சோழிங்கநல்லூர் தொகுதியை பொறுத்தவரையில், ஐடி நிறுவனங்கள் அதிகமாக அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். மேலும், வேகமாக வளர்ச்சி பெற்ற நகர்ப்புற தொகுதியாகவும் இது கருதப்படுகிறது.
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி:
சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் கிட்டத்தட்ட 1,71,558 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் கே.பி. கந்தன் 1,36,153 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 35,405 வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் ரமேஷ் அபார வெற்றி பெற்றார்.
மேலும் படிக்க: தொகுதிகள் குறைத்து கொடுத்தாலும் பரவாயில்லை – மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ..
சோழிங்கநல்லூர் தொகுதியை எடுத்துக் கொண்டால், சோழிங்கநல்லூர், பெருங்குடி, கரப்பாக்கம், துரைபாக்கம், நாவலூர், செம்மஞ்சேரி, பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன. இந்த பகுதிகள் பெரும்பாலும் ஐடி நிறுவனங்கள் வளர்ச்சி பெற்ற பகுதிகளாகும்.
ஐடி ஊழியர்கள் அதிகம் இருக்கும் தொகுதி:
இந்த தொகுதியில் ஐடி ஊழியர்கள் மற்றும் நடுத்தர வர்க்க வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இதனால் இந்த தொகுதியில் திமுகவிற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவிற்கு ஆதரவு அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
முக்கிய பிரச்சனைகள் என்ன?
இப்பகுதிகள் பலவும் கடுமையான வெள்ளப் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் முதல் தளம் அல்லது இரண்டாம் தளம் வரை தண்ணீர் தேங்கும் நிலை தொடர்ந்து ஏற்படுகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இதற்கு நிரந்தரத் தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் சோழிங்கநல்லூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல், மழைநீர் வடிகால் பிரச்சினை போன்றவை இங்கு முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.
மேலும் சோழிங்கநல்லூர் தொகுதியை பொறுத்தவரையில், பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் விநியோகம் கட்டுப்பாடாகவே உள்ளது. பெரும்பாலும் தனியார் லாரிகள் அல்லது மெட்ரோ நீர் லாரிகள் மூலம் தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. குறிப்பாக கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது.
அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி:
எனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் எந்த வகையான வாக்குறுதிகளை முன்வைக்கிறார்கள் என்பதையே பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும் என கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக சோழிங்கநல்லூர் தொகுதி கருதப்படுகிறது. இந்த தொகுதியில் மொத்தம் 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.