காலையிலேயே பயங்கரம்… கார் மோதி பாத யாத்திரை சென்ற பக்தர்கள் 3 பேர் பலி!
Cuddalore Accident : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர், ஜூன் 11 : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார் மோதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது (cuddalore Accident) பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் அருகே புனித அந்தோணியார் ஆலயத்துக்கு பாத யாத்திரியாக சென்ற போது, கார் மோதியில் பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் சாலை விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதோடு, சாலை விதிமுறைகளை கடுமையாக்கியும் வருகிறது. இருப்பினும், சாலை விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், தமிழகத்திலும் தினந்தோறும் சாலை விபத்துகளால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
பாத யாத்திரை சென்ற பக்தர்கள்
சாலை விபத்துகளை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழலில், 2025 ஜூன் 11ஆம் தேதியான இன்று அதிகாலையிலேயே கோர விபத்து ஒன்று கடலூரில் நடந்துள்ளது. அதாவது, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பாத யாத்திரை சென்றுக் கொண்டிருந்தனர்.
புனித அந்தோணியார் ஆலயத்துக்கு பாத யாத்திரியாக 7 பேரும் சென்றுக் கொண்டிருந்தனர். சிந்தூர் ரயில்வே மேம்பாலம் அருகே இவர்கள் சென்றுக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் ஒன்று இவர்கள் மீது வேகமாக மோதியது.
இதில் பாத யாத்திரை மேற்கொண்டிருந்த 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அவ்வழியாக சென்றவர்கள் உடனே போலீசாருக்கும், ஆன்புலன்ஸ்க்கும் தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார், 7 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கார் மோதி 3 பேர் பலி
அங்கு அவர்களை பரிசோதனை செய்ததில் மூன்று பேர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், 4 பேருக்கு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் மீது காரை மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, 2025 ஜூன் 9ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் காரும், சுற்றுலா வேணும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் அதி வேகமாக சென்றதால் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.